ஜெயலலிதா விடுதலையில் தாமதம்: 10ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை
விழுப்புரம்: ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மனமுடைந்த பத்தாம் வகுப்பு மாணவி இன்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சிறுவந்தாடு மோட்சக்குளம் காலனி பகுதியை சேர்ந்தவர் தர்மன், விவசாயி. இவரது மகள் சங்கீதா (வயது 16). இவர் சிறுவந்தாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில்அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா விடுதலை செய்யப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சங்கீதா மனம் வருத்தமடைந்தார்.
இன்று காலை சங்கீதாவின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். 9 மணியளவில் வீட்டில் தனியாக இருந்த சங்கீதா தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் அவரது உடல் கருகியது. குடிசையும் எரிந்து சாம்பலாகியது. சிறிது நேரத்தில் சங்கீதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வளவனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சங்கீதாவின் குடும்பத்துக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆறுதல் கூறினார்கள்.
தற்கொலை செய்த மாணவி சங்கீதாவின் அண்ணன் கலியமூர்த்தி, அ.தி.மு.க. கிளை கழக செயலாளராக இருந்து வருகிறார்.
ஜெயலலிதாவிற்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது.