மோடி வருகைக்கு எதிர்ப்பு… தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கறுப்பு கொடி போராட்டம்: 500 பேர் கைது
சென்னை: தமிழகம் வரும் நரேந்திரமோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கறுப்புக் கொடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சியில் இளந்தாமரை மாநாட்டில் பங்கேற்க வரும் நரேந்திர மோடிக்கு பல்வேறு இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மதுரையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மாவட்ட நீதிமன்றம் முன்பாக, மோடியின் உருவப்படத்தை எரித்து அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி நீதிமன்றத்துக்கு எதிரே மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், மோடியின் உருவப்படத்தை எரித்து ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாலக்கரைப் பகுதியில், மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு மோடிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
சென்னை சென்டரல் ரயில் நிலையத்துக்கு எதிரே, மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால் 20 பெண்கள் உட்பட 60 பேர் கைது செய்யப்டனர்.
இதே போல் சென்னை ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ அமைப்பை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த இரண்டு இடங்களில் நடந்த போராட்டங்களிலும் மொத்தம் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மோடியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications