மதுவிலக்கை வலியுறுத்தி 9ம் தேதி மதுக்கடைகளை முற்றுகையிடும் போராட்டம்: எஸ்.டி.பி.ஐ அறிவிப்பு!
சென்னை: மதுவிலக்கை வலியுறுத்தி வரும் 9ம் தேதி தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்த இருப்பதாக எஸ்.டி.பி.ஐ அறிவித்துள்ளது.
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் மதுவினால் விபத்துக்கள், சமூக தீங்குகள், குற்றங்கள் பெருகிவரும் நிலையில், எஸ்.டி.பி.ஐ கட்சி உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், சமூக ஆர்வலர்களும் மதுவிலக்கு கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருகின்றனர். அந்த வகையில் மதுவிலக்கு கோரிக்கையை வலியுறுத்தி போராடி வந்த காந்தியவாதி சசிபெருமாள் அவர்களின் மறைவையொட்டி, தமிழகம் முழுவதும் மதுஒழிப்பு போராட்டம் வீரியம் பெற்று வருகிறது.
மதுவிலக்கு கோரிக்கையை வலியுறுத்தி அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு அமைப்புகளும், மாணவர்கள் மற்றும் பெண்கள் அமைப்புகளும் தீவிரமாக போராடி வருகின்றன. காந்தியவாதி சசிபெருமாள் குடும்பத்தினரும், மதுவிலக்கு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை, அவரது உடலை பெற மறுத்து தொடர் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், மதுவினால் சீரழிந்துகொண்டு இருக்கும் தமிழகத்தை, அத்தீமையிலிருந்து காக்கவேண்டி, தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக நடைபெற்றுவரும் போராட்டங்களை தமிழக அரசு காவல்துறை மூலம் அடக்குமுறையை கையாண்டு ஒடுக்கி வருகிறது. ஒட்டுமொத்த தமிழகத்தின் ஒற்றைக் கோரிக்கையாக மாறியுள்ள மதுவிலக்கு கோரிக்கையை தமிழக அரசு சிறிதும் கவனத்தில்கொள்ள தொடர்ந்து மறுத்து வருகிறது. மாறாக டாஸ்மாக் கடைக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்து விற்பனையை தொடர்ந்து நடத்தி வருகிறது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரிக்கையை வலியுறுத்தி ஆண்டுதோறும் எஸ்.டி.பி.ஐ கட்சி தொடர் பிரச்சார இயக்கத்தையும், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்களையும் எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திவருகிறது. மேலும் மதுவினால் ஏற்படும் தீங்குகள் குறித்த மது ஒழிப்பு பிரச்சாரத்தையும் எஸ்.டி.பி.ஐ கட்சி மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மதுவிலக்கு கோரிக்கை போராட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு கையாண்டுவரும் ஒடுக்குமுறை நடவடிக்கையை கண்டித்தும், மதுவிலக்கு குறித்த நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தியும், வரும் ஆகஸ்ட் 09 ஆம் தேதி எஸ்.டி.பி.ஐ கட்சியின் அனைத்து சட்டமன்ற தொகுதி கமிட்டியின் சார்பாக தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
மது தீமையற்ற தமிழகம் உருவாக, இந்த போராட்டத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும், மதுவிலக்கு ஆர்வலர்களும் கலந்துகொள்ள எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக அழைப்பு விடுக்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications