வரத்து அதிகரிப்பு... மீன் விலை சரிந்தது... மீன் பிரியர்கள் மகிழ்ச்சி
கடல் மீன்கள் அதிகம் மார்க்கெட்டுக்கு வருவதால் விலை வெகுவாகக் குறைந்துள்ளது என்பதால் மீன் பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தூத்துக்குடி: தருவைகுளத்தில் மீன் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளதால் பொது மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு ஆர்வமுடன் சென்று வருகின்றனர். அதிக மீனுடன் மகிழ்ச்சியுடன் கரை திரும்புகின்றனர்.
இதனால் தருவைகுளம் ஏலக் கூடத்திற்கு கேறை, சூறை, பாறை, காறல், கட்டமூறல், ஊனி, மஞ்சகிளி போன்ற மீன்களின் வரத்து அதிகமாக உள்ளது. இதன் காரணமாக தடை காலத்தில் உச்சத்தில் இருந்த மீன்கள் விலை தற்போது கடுமையாக சரிய தொடங்கியுள்ளது.
முதல் வகை மீன்கள் கிலோ ரூ.120 முதல் ரூ.150 வரை மட்டுமே ஏலம் போனது. ஊளி கிலோ ரூ.170க்கும், மஞ்சகிளி ரூ.50க்கும் விலை போனது.
மீன்வரத்து அதிகரிப்பால் அவற்றை வாங்கும் வகையில் நெல்லை, மதுரை, புதுக்கோட்டை, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் வியாபாரிகள் அதிகமாக வந்த வண்ணம் உள்ளனர். இனி வரும் நாட்களில் தேவையை பொருத்து மீன்களின் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மீன் வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர்.
தற்போது மீன்களின் விலை குறைவால் அசைவ பிரியர்களும், பொது மக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.