காங். மேலிடத்துடன் பேசிவிட்டு மீண்டும் கருணாநிதியை சந்திப்பார் குலாம்நபி ஆசாத்: மு.க. ஸ்டாலின்
சென்னை: தொகுதிகள் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் மேலிடத்துடன் பேசிவிட்டு மீண்டும் திமுக தலைவர் கருணாநிதியை குலாம்நபி ஆசாத் சந்திப்பார் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை கோபாலபுரத்தில் கருணாநிதியை குலாம்நபி ஆசாத் சந்தித்து தேர்தல் வியூகம், தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், கருணாநிதியிடம் காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத் கருத்துகளை தெரிவித்தார்கள். கருணாநிதியும் தன்னுடைய எண்ணத்தை அவர்களிடம் கூறினார்.
இன்றைய பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. காங்கிரஸ் மேலிடத்துடன் இதுகுறித்து பேசிவிட்டு மீண்டும் அவர் கருணாநிதியை சந்திப்பார் என்றார்.
அப்போது திமுக அணிக்கு மேலும் சில கட்சிகள் வரும் என குலாம் நபி கூறியுள்ளாரே என ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அப்படியா, அவர் எந்த சோர்ஸில் கூறினாரோ தெரியவில்லை. அப்படி கட்சிகள் வந்தால் செய்தியாளர்களை கூட்டி தெரிவிப்போம் என்றார் ஸ்டாலின்.
கடந்த முறையை விட இந்த தேர்தலில் காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்படுமா என செய்தியாளர் ஒருவர் கேட்க, அதை அவர்களிடம் தான் சொல்ல முடியும். உங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லையே என்று சிரித்துக்கொண்டே கூறிவிட்டு நகர்ந்துவிட்டார்.