திரேஸ்புரம் துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் பலி.... வீடு புகுந்து போலீஸ் தேடுதல் நடவடிக்கை!
தூத்துக்குடி திரேஸ்புரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பெண்கள் பலியானயினர். வீடு புகுந்து போலீசார் தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video
தூத்துக்குடி: தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் 8 பேரை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளியதன் மூலம் அந்த நகரையே போலீஸார் சுடுகாடாக்கிவிட்டனர். இந்த நிலையில், திரேஸ்புரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் பலியாயினர். வீடு வீடாகப் புகுந்து போலீசார் தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை இருப்பதால் நிலத்தடி நீர் மாசுபடுவதுடன் விவசாயம் செழிக்க வழியில்லை என்று கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மூச்சுத்திணறல், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாகவும் கூறி கடந்த 3 மாதங்களுக்கு மேலாக அந்த நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டியது. போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட மக்கள் பேரணியாக சென்றனர். அப்போது அவர்களை பாதியிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தினர். ஆனால், அந்த தடுப்பை மீறி, போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று முற்றுகையிட்டனர்.
அப்போது பொதுமக்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை சூறையாடினர். இதையடுத்து போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 8 பேர் பலியாகிவிட்டனர். அவர்கள் அனைவரும் அப்பாவி மக்கள்.
இதற்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், திரேஸ்புரத்தில் இரண்டாவது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இதில் இரண்டு பெண்கள் பலியாயினர். இதைத் தவிர திரேஸ்புரத்தில் வீடு வீடாகப் புகுந்து போலீசார் தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவங்களால் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.