பணப்பட்டுவாடா தடுக்க.. புதுச்சேரி மாவட்டத்தில் இன்று முதல் இரவு நேர தடையுத்தரவு அமல்
புதுச்சேரி: தேர்தல் வன்முறைகளையும், பண பட்டுவாடாவையும் தடுக்கும் நோக்கில், புதுச்சேரி மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை போலவே புதுச்சேரி மாநில சட்டசபைக்கும் வரும் 16ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, இரவு நேரத்தில் பணப்பட்டுவாடா நடைபெற வாய்ப்பிருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் சென்றது.
தேர்தல் நேர வன்முறை மற்றும் பணப்பட்டுவாடா போன்ற விதிமீறல்களை தடுப்பதற்காக, புதுச்சேரி மாவட்டத்தில் இரவு 11 மணி முதல் காலை 6 மணிவரை தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்லது. இன்று முதல் தேர்தல் முடியும்வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்.
சட்டப்பிரிவு 144ன்கீழ் மாவட்ட கலெக்டர் ஜவகர் இந்த தடையுத்தரவை இன்று பிறப்பித்தார். தடையுத்தரவு அமலில் இருக்கும் கால கட்டத்தில் 1 நபருக்கு மேல் சேர்ந்து நடமாடுவது தடை செய்யப்படுகிறது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரான நாராயணசாமி இதுகுறித்து கூறுகையில், அனைத்து கட்சியினரும், தடையுத்தரவை மீறாமல் மதித்து நடக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார்.