ராம ராஜ்ய ரத யாத்திரை: நெல்லையில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ்
நெல்லை மாவட்டத்தில் கடந்த 19ஆம் தேதி முதல் அமலில் இருந்த 144 தடை உத்தரவு இன்று வாபஸ் பெறப்பட்டது.
நெல்லை: ராம ராஜ்ய ரத யாத்திரையை முன்னிட்டு கடந்த 19ம் தேதி முதல் அமலில் இருந்த 144 தடை உத்தரவு இன்று காலை 6 மணி முதல் தளர்த்தப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
விசுவ இந்து பரிஷத் ஆதரவு அமைப்பு சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் உள்பட பல்வேறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து கடந்த மாதம் பிப்ரவரி 13ஆம் தேதி ராமராஜ்ய ரதம் புறப்பட்டது.
இந்த ரதம் கடந்த 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கேரள மாநிலத்தில் இருந்து நெல்லை மாவட்டம் புளியரை வழியாக தமிழகம் வந்தது. தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், மதுரை ராமேஸ்வரம் சென்றது.
அங்கு பூஜைகள் நடத்திய பின்னர் நேற்று காலை கிழக்கு கடற்கரை சாலை வழியாக தூத்துக்குடி வந்தது. நேற்று மாலை 3 மணியளவில் பாளையங்கோட்டை அரியகுளம் சாரதா கல்லூரி வந்தது. அங்கு ரதத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், ரதத்தில் உள்ள ராமர், சீதை சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் 3.50 மணி அளவில் ரதம் புறப்பட்டது.
ராமராஜ்ய ரதம் நெல்லை மாநகர பகுதிக்குள் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் ரதம் புறவழிச்சாலை வழியாக கன்னியாகுமரிக்கு சென்றது. செல்லும் வழியில் வள்ளியூர் மற்றும் அந்த பகுதியில் உள்ள ஊர்களில் ரதத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
ராமராஜ்ய ரத யாத்திரைக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க நெல்லையில் 19 ஆம் தேதி முதல் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இன்று காலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.