கேரள நக்சல் அமைப்பு மிரட்டல்: கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரூ.13500 கோடியில் இந்தியா-ரஷ்யா கூட்டு முயற்சியுடன் 1000 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி முடிவடைந்து மின் உற்பத்தி தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அணு மின் நிலைய முற்றுகை போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவை தொடர்ந்து நடந்து வந்தன. இடிந்தகரையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு கேரளாவைச் சேர்ந்த நக்சல் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளாக கேரள உளவுத்துறையும், மத்திய உளவுத்துறையும் தமிழகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. இதை தொடர்ந்து கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்ட எஸ்.பி. விஜயேந்திர பிதாரி மேற்பார்வையில், வள்ளியூர் டிஎஸ்பி ஸ்டான்லி ஜோன்ஸ் தலைமையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு ஏற்கனவே 500க்கும் மேற்பட்ட போலீசார் நிரந்தரமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களுடன் கூடுதலாக அதிரடிப்படையினர் 300க்கும் மேற்பட்டோர் கூடங்குளத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். கடலோர பகுதிகள் மற்றும் அணு மின் நிலைய வளாகம் ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் தொழில் மத்திய பாதுகாப்பு படையினரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கூடங்குளத்தில் முன் அறிவிப்பு இல்லாமல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications