உரிமை கொண்டாட யாராவது வரலாம் என பரபரப்பு.. போயஸ் கார்டனில் போலீசார் குவிப்பு
ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான வேதா நிலையத்தை அரசு நினைவிடமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்தார்.
சென்னை: சென்னை போயஸ் கார்டனில் போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான வேதா நிலையத்தை அரசு நினைவிடமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்தார். இதனையடுத்து ஜெயலலிதா இல்லம் முன்பு போலீசார் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை தலைமை செயலகத்தில் பேட்டி இன்று திடீரென்று செய்தியாளர்களை சந்தித்துப்பேசினார். அப்போது அவர் கூறுகையில், " ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்வராக 6 முறை திறம்பட பணியாற்றி, தமிழ்நாட்டின் நலனுக்காக தன் இன்னுயிரை ஈந்துள்ளார்கள்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட உன்னத தலைவராய், அவர் அனைவர் மனதிலும் நீக்கமற நிறைந்துள்ளார்கள்.
ஜெயலலிதா வாழ்ந்த 'வேதா நிலையம்' , இல்லத்தை நினைவிடமாக்கி பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்குமாறு தொடர்ந்து பல்வேறு தரப்பிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. ஜெயலலிதா அவர்களின் சிறப்புகளையும், நாட்டிற்கு அவர் செய்த சாதனைகளையும், தியாகங்களையும், பொதுமக்கள் அறையும் வண்ணம், அம்மா அவர்கள் சிறப்பாக வாழ்ந்த , சென்னை போயஸ் தோட்டத்தில், அமைந்துள்ள 'வேதா நிலையம்' அரசு நினைவிடமாக மாற்றப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும்." என்று தெரிவித்தார் முதல்வர்.
முதல்வரின் அறிவிப்பையடுத்து போயஸ் கார்டன் மீண்டும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பெண் போலீசார்களும் குவிக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதா இல்லத்துக்கு உரிமை கொண்டாடி வேறு யாராவது வந்துவிடுவார்களோ என்ற அடிப்படையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.