அப்புறம் என்ன மக்களாட்சி, மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற முழக்கமெல்லாம்?.. சீமான் ஆவேசம்
சென்னை: போராடுகிற மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காவிட்டால், பிறகு மக்களாட்சி என்று கூறுவது எதற்காக. மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற முழக்கமெல்லாம் எதற்கு என்று முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.
மது விலக்கு கோரி சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்திய மாற்றுத் திறனாளிகளை சீமான் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசினார்.
மது விலக்கு கோரி நடத்தப்படும் போராட்டங்களை அரசு கையாளுகிற விதம் சரியில்லை என்று அப்போது அவர் குற்றம் சாட்டினார். சீமான் பேட்டியிலிருந்து...

பெண்களால் நடந்து செல்ல முடியவில்லை
பள்ளி, கல்லூரிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும், வழிபாட்டுத்தலங்கள் அருகிலும் கடைகள் இருக்கிறது. அங்கு பெண்கள் கடந்து செல்ல முடியவில்லை. கடந்து செல்லும் பெண்கள் எல்லாம் முகச்சுழிப்போடும், வேதனையோடும் செல்கிறார்கள். பள்ளிகளுக்கு பெண்பிள்ளைகளை அனுப்ப முடியவில்லை என்று தாய்மார்கள் வேதனைப்படுகிறார்கள். இதுபோன்ற இடங்களில் இருக்கும் மதுபானக்கடைகளையாவது மூடுங்கள் என்றுதான் குறைந்தபட்ச கோரிக்கை வைக்கிறோம்.

போராடி செத்த சசிபெருமாள்
அந்தக் கோரிக்கையை வைத்துதான் ஐயா சசிபெருமாள் போராடி, செத்தார். அவரது உடல் இன்னும் அடக்கம் செய்யாமலிருக்கிறது. அதனைப்பற்றி எவரும் பேசவில்லை. அவரது குடும்பங்கள் இன்னும் பட்டினிப் போராட்டம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் என்ன மதுபானக்கடைகளை எங்கள் பெயருக்கு எழுதி வையுங்கள் என்றா கேட்கிறார்கள்?

அதைக் கூட செய்ய முடியாதா உங்களால்
குறைந்தபட்சம் பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள் பக்கத்திலிருக்கும் மதுபானக்கடைகளையாவது மூடிவிடுங்கள் என்றுதானே கேட்கிறார்கள். அதனைக்கூட அரசால் செய்ய முடியாதா?

பிறகு எதற்கு வெட்டி முழக்கம்
போராடுகிற மக்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுக்காவிட்டால் அப்புறம் என்ன மக்களாட்சி? மக்களால் நான்! மக்களுக்காக நான் என்ற முழக்கமெல்லாம்?

மண் மீதான பற்றினால் போராடுகிறார்கள்
இங்கே போராடுகிற மாற்றுத்திறனாளிகள் மண்ணின் மீது, மக்களின் மீதுள்ள பற்றினால் போராட்டம் செய்கிறார்கள். மது குடித்துவிட்டு விபத்தாகி இறக்காது இருப்பவன் மாற்றுத்திறனாளியாகத்தானே போவான். எங்களைப் போல இன்னொருவர் உருவாகக்கூடாது என்றுதானே இவர்கள் போராடுகிறார்கள், இந்தப் போராட்டம் செய்பவர்களை அடிப்படை வசதியில்லாத இடத்தில் அடைக்கிறார்கள். அடித்து துன்புறுத்தி வசதியில்லாத இடத்தில் கொண்டுவந்துவிட்டிருக்கிறார்கள். இது மனிதாபிமானமற்ற செயல். இதுதான் மக்களின் மீது அக்கறையுள்ளவர்கள் செய்கிற செயலா?

வாய் திறந்து பதில் சொல்லலாமே
போராடுகிற மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து கொஞ்சம் கொஞ்சமாக கடைகளை குறைக்கிறேன்; கல்விக்கூடங்கள், வழிபாட்டுத்தலங்கள் அருகே இருக்கிற கடைகளையாவது அகற்றுகிறேன் என அரசு வாய்திறந்து பதில் சொல்ல வேண்டும்.

கேரளாவைப் பார்த்து திருந்துங்கள்
பக்கத்தில் கேரளா நமக்கு முன்மாதிரியாக இருக்கிறது. அதனால், கேரளாவைப் போல படிப்படியாக 6000 மதுபானக்கடைகளில் குறைந்தது 500 மதுபானக் கடைகளையாவது மூட வேண்டும். அதனையெல்லாம் விடுத்து ஒன்றும் செய்யாமல் இருப்பது, மக்களுக்கும், அரசுக்குமான ஒரு அகந்தைப்போர் போலதான் இருக்கிறது என்றார் சீமான்.












Click it and Unblock the Notifications