தமிழக சட்டசபை செயலாளராக சீனிவாசன் நியமனம்
தமிழக சட்டசபை செயலாளராக இருந்த பூபதி ஓய்வு பெற்றதை அடுத்து சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இன்று சட்டசபை செயலாளராக சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டசபை செயலாளராக இருந்த ஜமாலுதீன் கடந்த ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்றார். அவருக்குப் பின்னர் பூபதி என்பவர் நியமிக்கப்பட்டார். பூபதி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இதனையடுத்து அடுத்த சட்டசபை செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்தது.
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதன் மீது 4 நாட்கள் விவாதம் நடந்த பிறகு சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த மாதம் 12ஆம்தேதி ஜெயலலிதா உருவப் படத்தை திறந்து வைப்பதற்காக சட்டசபை கூட்டம் கூட்டப்பட்டது. அதன் பிறகு சபை ஒத்தி வைக்கப்பட்டது.
வரும் 31 சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். வரும் 14 அல்லது 15ஆம் தேதிகளில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய ஆலோசனை நடந்து வருகிறது. இதற்காக துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
சட்டசபை செயலாளராக இருந்த பூபதி ஓய்வு பெற்று விட்டதால் புதிய சட்டசபை செயலாளராக சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிகழ்ச்சி நிரல் தயாரிப்பது, எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு பதில்களை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட அனைத்தையும் சட்டசபை செயலாளர்தான் செய்து கொடுப்பார்.
சட்டசபை செயலாளர் நியமிக்கப்பட்ட பிறகே பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்பதால் புதிய சட்டசபை செயலாளர் நியமனம் பற்றி அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
சட்டசபையை நடத்துவதற்கு சபாநாயகருக்கு உதவியாக சட்டசபை செயலாளர்தான் அனைத்து பணிகளையும் செயல்படுத்துவார். சட்டசபை செயலாளர் பதவி நியமனம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே நீதிமன்ற அனுமதியுடன் தான் சட்டசபை செயலாளரை நியமிக்க முடியும் என்று கூறப்பட்ட நிலையில் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சீனிவாசன் தற்போது சபாநாயகர் தனபாலின் தனிப்பிரிவு செயலாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.