பெட்டி பெட்டியாக தங்கம், கட்டுக்கட்டாக பணம் வைத்திருந்த சேகர் ரெட்டிக்கு ஜாமீன்!
சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் 2 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை: சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவர் திங்கள் கிழமை வெளியே வருவார் என கூறப்படுகிறது.
போயஸ்கார்டனுக்கு நெருங்கிய சேகர் ரெட்டியின் வீடுஅலுவலகங்களில் நடத்திய ரெய்டில் 178 கிலோ தங்கக்கட்டிகளும் 142 கோடி ரூபாய் புதிய 2000 ரூபாய் நோட்டுகளும் வருமான வரித்துறை ரெய்டின் போது சிக்கின. இதையடுத்து சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.
சிபிஐயால் கைது செய்யப்பட்டு விடுதலையான சேகர் ரெட்டியை கடந்த மார்ச் 20 ஆம் தேதி அமலாக்கத்துறைகைது செய்தது. இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு 2 முறை ஜாமீன் மறுக்கப்பட்டது.
இந்நிலையில் அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. சேகர் ரெட்டி அவரது நண்பர்கள் பிரேம்குமார் மற்றும் ஸ்ரீநிவாசலு ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
3 பேரும் உரிமையியல் நீதிமன்றத்தில் உத்தரவாம் செலுத்தி ஜாமீன் பெற்றுக்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி 10 லட்சத்துக்கான உத்தரவாதம் 5லட்சத்துக்கான இருநபர் உத்தரவாதம் அளிக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் ஜாமீன் பெற்றுள்ளதால் டெல்லி அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான ராமச்சந்திரன் மற்றும் ரத்னம் ஆகியோரின் முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.