காளி தாயே! உன் கோயிலை இடிப்பவன் ரத்தம் கக்கி சாக வேண்டும்.. மிளகாய் பொடி அபிஷேகம் செய்த சாமியாடி
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே நீர் நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்ட கோயில்லை இடிக்க சென்ற அதிகாரிகளுக்கு 3 நாள்களில் சமாதி ஆகிவிடுவார்கள் என வேண்டி சாமி சிலைகளுக்கு பெண் சாமியாடி ஒருவர் சாபமிட்டதால் பரபரப்பு எழுந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்துள்ள கொளப்பாக்கம் கிராமத்தில் வண்டலூர் கேளம்பாக்கம் சாலை ஓரத்தில் கடந்த சில ஆண்டுகளாக காளி கோயில் அமைத்து வழிபட்டு வருகின்றனர். இந்த கோயில் அருகே திருநங்கையர்கள் தங்கியுள்ளனர்.
இந்த கோயிலில் பரிகார பூஜை செய்வது, பேய் ஓட்டுவது, செய்வினை எடுப்பது போன்ற பூஜைகளை திருநங்கைகள் செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த கோயில் கட்டப்பட்டுள்ள இடம் நீர் நிலையில் என்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

நீர் நிலை ஆக்கிரமிப்பு
இதையடுத்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளை இடிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுபடி நேற்று காலை அரசு அதிகாரிகள் போலீஸார் துணையுடன் சென்றனர். அப்போது அவர்கள் அங்கிருந்த திருநங்கைகளிடம் கோயிலை இடிப்பதற்கான உத்தரவை காண்பித்தனர். ஆனால் இதை ஏற்க மறுத்த அவர்கள் கோயிலை இடிக்கக் கூடாது என்றனர்.

கடவுளுக்குத்தானே என வாக்குவாதம்
நீர் நிலைகளை ஆக்கிரமித்து நாங்களா குடியிருக்கிறோம். கடவுளுக்குத்தானே கோயில் அமைத்திருக்கிறோம் என வாதாடினர். அப்போது அங்கு தலையில் ஜடாமுடியுடன் வந்த சாமியாடி பெண் முருகம்மா என்பவர் காளியம்மன் , நாகாத்தம்மன், வீரபத்திரன் உள்ளிட்ட சிலைகள் மீது திடீரென மிளகாய் கொடி கலந்த நீரில் அபிஷேகம் செய்தார்.

ரத்தம் கக்கி சாக வேண்டும்
அப்போது அவர் சாமிகளிடம், "நானா உங்களை தேடி வந்தேன். நீங்கள் தானே என்னை தேடி வந்தீர்கள். கோபத்துடன் வாங்க, வந்து கோயிலை இடிப்பவர்கள் 3 நாட்களில் ரத்தம் கக்கி சுடுகாட்டுக்கு செல்லும் வகையில் தண்டனை கொடுக்க வேண்டும் என ஆக்ரோஷமாக கூறினார்.

மிளகாய் பொடி தண்ணீரை பூசி கொண்ட சாமியாடி
பின்னர் சாமி சிலைகளுக்கு தெளித்த மிளகாய் பொடி தண்ணீரை தனது முகத்திலும் பூசிக் கொண்டார். அதில் அவரது கண், வாய், மூக்கு என அனைத்து பாகங்களிலும் மிளகாய் பொடி பரவியது. இதனால் அலறிய திருநங்கைகள் ஓடி போய் அந்த மிளகாய்பொடியை துடைத்தனர். மேலும் சிலர் கேன் தண்ணீரை கொண்டு வந்து முருகம்மாள் மீது ஊற்றிவிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வாக்குவாதம்
அதன்பின் கூடுதலாக காவல்துறையினர் குவிக்கப்பட்டு அங்கு வந்த இந்து முன்னணி நிர்வாகிகளுடன் அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நீண்ட நேரம் கடும் வாக்குவாதம் நடந்தது. இதையடுத்து நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை தாங்களே அப்புறப்படுத்துவதாகவும் அதற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். எனினும் அங்கு பாதுகாப்பிற்காக பலத்த போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications