சிரிப்பழகன் செல்லூர் ராஜூ! மாஜி அமைச்சர் வளர்மதி சூட்டிய அடைமொழி! அதிமுக விழாவில் குபீர் சிரிப்பலை!
மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு ''சிரிப்பழகன்'' என்ற புதிய அடைமொழியை சூட்டியுள்ளார் மாஜி அமைச்சர் வளர்மதி.
மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுகவின் எழுச்சி மாநாட்டுக்கான முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று காலை நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற இந்நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாநாட்டு குழு பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

அந்த வகையில் அந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி, மதுரையில் 3 படைகள் உள்ளதாகவும் அதில் முதல் படை என்னவென்று கேட்டால் ''சிரிப்பழகன் செல்லூர் ராஜூ படை'' என்றும் இரண்டாவது படை ''தளபதி ஆர்.பி.உதயகுமார் படை'' எனவும் புதிய அடைமொழிகளை சூட்டினார்.
மாணவபருவம் முதல் திமுக எதிர்ப்பில் மிக உறுதியாக நின்று வரும் ராஜன் செல்லப்பாவின் படை மூன்றாவது படை எனவும் வளர்மதி பேசினார். இந்த மூன்று படைகளும் அதிமுக எழுச்சி மாநாட்டில் தரக்கூடிய செங்கோலனது ஆட்சி மாற்றத்தை கொண்டுவரக் கூடிய செங்கோலாக அமையும் எனக் கூறினார்.

இதில் ஆர்.பி.உதயகுமாரை பற்றி பேசும் போதோ, ராஜன் செல்லப்பாவை பற்றி பேசும் போதோ கிடைக்காத வரவேற்பும் எழாத சிரிப்பலையும் செல்லூர் ராஜுவை பற்றி பேசும் போதும் மட்டும் குபீர் சிரிப்பலை கிளம்பியது. ஏற்கனவே வைகை அணையில் தண்ணீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மோகோல் விட்டது முதல் தெர்மோகோல் ராஜூ என செல்லூர் ராஜூவை பலரும் கலாய்த்து வருகின்றனர்.
இப்போது சிரிப்பழகன் என்ற புதிய அடைமொழி கொடுக்கப்பட்டிருப்பதால் இனி அந்தப் பெயரிலும் அவரை சமூக வலைதளங்களில் கலாய்ப்பார்கள் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications