தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக செம்மலை அறிவிப்பு
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக, முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான செம்மலை அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா வரும் 23ம் தேதி திங்கள்கிழமை பகல் 12 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் வைத்து நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழக சட்டப் பேரவையின் தாற்காலிக சபாநாயகராக மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செம்மலை நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மலை வருகிற திங்கள்கிழமை (23 ஆம் தேதி) ஆளுநர் மாளிகையில் நடைபறும் நிகழ்ச்சியில் ஆளுநர் ரோசய்யா முன்பு தாற்காலிக சபாநாயகராகப் பதவியேற்று கொள்வார் என தமிழக சட்டப் பேரவைச் செயலர் ஏ.எம்.பி.ஜமாலூதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக வேறொருவர் அறிவிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்படுவார். இம்முறை பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக திமுக இருப்பதால் அக்கட்சியின் அனுபவம் வாய்ந்த உறுப்பினர்களை சமாளிக்கும் வகையில் புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications