விரைவில் ஓ.பி.எஸ். ஆட்சி மலரும்.. செம்மலை எம்.எல்.ஏ.,நம்பிக்கை
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ செம்மலைக்கு மேட்டூர் தொகுதி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
மேட்டூர்: சென்னையிலிருந்து தொகுதிக்கு திரும்பிய ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ. செம்மலைக்கு மேட்டூர் தொகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. சசிகலா அணி, ஜெயலலிதா அணி என பிரிந்துள்ளதால், தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்லவே அவரது ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமியை சட்டசபைக்குழு தலைவராக தேர்வு செய்தனர்.

இதனையடுத்து ஆளுநரிடம் ஆதரவு கடிதம் அளித்து முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிச்சாமி. நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து சசிகலா ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்களுக்கு தொகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பல எம்எல்ஏக்கள் தொகுதி பக்கம் செல்ல முடியாமல் எம்.எல்.ஏ விடுதியிலேயே முடங்கியுள்ளனர். பல எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே அண்மையில் சசிகலா அணியில் இருந்து விலகி ஓ.பி.எஸ். அணியில் இணைந்த செம்மலை நேற்று தமது மோட்டூர் தொகுதி சென்றார். அவருக்கு தொகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேட்டூர் செல்லும் வழியில், ஓமலூர் பகுதிவாசிகள் பட்டாசு வெடித்தும், தோளில் சுமந்தபடியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செம்மலை, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்ததாகவும், மக்களின் மனதில் தாங்கள் தான் ஆட்சி செய்வதாகவும் கூறினார். தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களின் ஆதரவும் தங்களுக்கே உள்ளது என்றும் விரைவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆட்சி மலரும் என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications