குமரியை புரட்டி போட்டது ஓகி!... ஓகியையே புரட்டி போட்ட எம்எல்ஏ செம்மலை!!... சட்டசபை கூத்துகள்!!!
ஓகி புயலை ஓகே புயல் என எம்எல்ஏ செம்மலை கூறியதால் சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது.
சென்னை: சமீபத்தில் குமரி மாவட்டத்தையே புரட்டி போட்டி ஓகி புயலை எம்எல்ஏ செம்மலை ஓகே புயல் என கூறியதால் சட்டசபையில் சிரிப்பலை ஏற்பட்டது.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. தற்போது தினகரன் வேறு சட்டசபையில் இருப்பதால் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போய் கொண்டிருக்கிறது.
எதிர்க்கட்சிகளும் வழக்கம்போல் தங்கள் "கடமையை" ஆற்றுகின்றனர். இன்று ஓகி புயல் பாதிப்பு குறித்து விவாதம் ஏற்பட்டது. அப்போது செம்மலை பேசுகையில், ஓகி புயலை ஓகே புயல் என்றார்.
இதை கேட்டதும் அவையிலிருந்தவர்கள் குபீரென சிரித்தனர். அதோடு விட்டாரா,
குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸின் பெயரையும் ஜேம்ஸ் என்று கூறிவிட்டார். அந்த சிரிப்பலை நீண்ட நேரத்துக்கு நீடித்தது.
குமரி மாவட்டத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ஆம் தேதி ஓகி புயல் உருவாகி அந்த மாவட்டத்தையும் சுற்றியுள்ள பகுதிகளையும் புரட்டி போட்டது. ஆனால் செம்மலையோ அந்த புயலின் பெயரை தவறாக கூறி அதையே புரட்டி போட்டுவிட்டார்.
இதையடுத்து செம்மலை கூறிய இரு வார்த்தைகளையும் அவை குறிப்பில் சபாநாயகர் சரி செய்தார். இது கூட பரவாயில்லை, டுவிட்டரில் உள்ள ப்ளூ டிக் குறித்து கேட்டதற்கு ப்ளூ டூத் குறித்து மிக அழகாக விளக்கினார் அமைச்சர் மணிகண்டன். அவர் தமிழக தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆவார்.