Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெள்ளிக் காசுகளை வாரி இறைத்துக் கட்டிய ரயில் பாதை – திரும்ப கிடைக்குமா ரயில் பயணம்?

Subscribe to Oneindia Tamil

நெல்லை: வரலாற்று சிறப்பு மிக்க ரயில் பாதைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதையாகும்.

1873 ஆம் ஆண்டு அப்போதைய ஆங்கிலேய அரசால் தொடங்கப்பட்ட செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதை பணிகள் 27 ஆண்டுகள் நடைபெற்றது.

இப்பாதையை அமைத்திட தென்னிந்திய ரயில்வே கம்பெனி ரூபாய் 17 லட்ச ரூபாயும், திருவாங்கூர் நிர்வாகம் ரூபாய் 7 லட்ச ரூபாயும், அப்போதைய திருவாங்கூர் திவான் ராமய்யர் ரூபாய் 6 லட்சம் ஆக ரூ.30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இப்பணிகள் தொடங்கப்பட்டு 1901ம் ஆண்டு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டது.

Sengottai – kollam train service…

சரக்கு ரயில் போக்குவரத்து:

1902 ஆம் ஆண்டு முதல் சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 1901 ஆம் ஆண்டு கொச்சி துறைமுகத்திற்கு கப்பல் வழியே ரயி்ல் பெட்டிகள் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து மாட்டு வண்டிகளில் பொருட்களை ஏற்றி கொல்லம் கொண்டு வரப்பட்டது.

முதல் பயணிகள் ரயில்:

முதல் பயணிகள் ரயில் போக்குவரத்து 1904 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி கொல்லம் ரயில் நிலையத்தில் வைத்து 21 குண்டுகள் முழங்கிட அங்குள்ள ரயில் நிலைய மேலாளர் ராமைய்யா என்பவர் முதல் பயணிகள் ரயிலை கொல்லத்தில் இருந்து செங்கோட்டைக்கு கொடியசைத்து துவங்கி வைத்தார்.

தூம சகட சூரன்:

ரயிலின் பெயர் தூம சகடசூரன் ஆகும். சில மாதங்கள் இப்பாதையில் சென்ற ரயில் தென்மலை-கழுதுருட்டி இடையே உள்ள ஒரு குகையில் மண் சரிவு ஏற்பட்டு அப்படியே பல பயணிகளோடு மண்ணோடு மண்ணாகி புதைந்து போனது.

13 கண்கொண்ட பாலம்:

அதன்பின் அருகிலேயே 13 கண் கொண்ட மிகவும் பிரமண்டமான ஒரு பாலத்தை கட்டினர். அப்பாலம் வழியே ரயி்ல் போக்குவரத்து நடைபெற்று வந்தது.

பகவதிபுரம் டூ ஆரியங்காவு:

இப்பாதையில் பகவதிபுரம் முதல் ஆரியங்காவு இடையே 1 கிமீ தொலைவில் ஒரு மலை குகையும், கழுதுருட்டி-தென்மலை-இடமண்-இடையே 4 மலைக்குகைகளும், 5 பெரிய பாலங்களும், 120க்கும் மேற்பட்ட சிறிய பாலங்களும் உள்ளன.

இரு மாநில எல்லைப் பகுதி:

உயர்ந்த மலைப்பகுதியின் கீழ் புறத்தில் கடல் மட்டத்தி்ல் இருந்து சுமார் 700 அடி உயரத்திலும் ரயில் சொல்லத் தொடங்குகிறது. எஸ் வளைவு என்ற பகுதி இரு மாநில எல்லை பகுதியாகும்.

பாறைகளை உடைத்து ரயில் பாதை:

இங்கு கீழே பேருந்தும், மேலே ரயிலும் செல்ல தொடங்கும் பாதை.இதிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் சென்றல் அடர்ந்த பாறைகளை உடைத்து உருவாக்கப்பட்ட ரயில் பாதை தொடங்குகிறது.

ஆயிரம் பேரைக் காவு வாங்கிய குகை:

இதற்கு அடுத்தற்போல் ஆயிரம் பேரை காவு வாங்கியதாக இன்றும் செவிவழி கதையாக கூறப்படும் 1901 ஆம் ஆண்டு அடர்ந்த 500 அடி உயரம் கொண்ட மலையினை சுமார் 15 அடி உயரமும், 15 அடி அகலமும், கொண்ட 900 மீ்ட்டர் நீளம் கொண்ட முதல் மலைக்குகை தொடங்குகிறது.

திகில் கலந்த பயணம்:

இந்த மலைக் குகையினுள் ரயில் செல்ல தொடங்கும் போது அமாவாசை இருட்டில் செல்வது போன்ற உணர்வும், ஒரு திகில் கலந்த விவரிக்க முடியாத உணர்வும் ஒரு சேர ஏற்பட்டாலும் ஆயிரம் குளிர்சாதன பெட்டிகளை இயக்கியது போன்ற குளிர்ச்சியும் ஏற்படும்.

ரயில் பாதையை ஒட்டி குடியிருப்புகள்:

இந்த ரயில் பாதையை ஓட்டி ஏராளமான பகுதிகளில் குடியிருப்புகள், 8 கண் பாலத்தை ரயில் கடந்து கழுதுருட்டி ரயில் நிலையத்தை தொட்டு தென்மலை ரயில் நிலையத்தை நோக்கி செல்லும் பாதையில் அமைந்துள்ளன.

அபாரமான கட்டிடத் திறமை:

சுமார் 300 அடி முதல் 500 அடி நீளமுள்ள ஒரு சிறு மலைக்குகைகளை ரயில் கடக்கும்போது இடப்புறம் திரும்பி பார்த்தால் ஆங்கிலேயரின் அபாரமான செயல்திட்டமும், இருமாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பும், தியாகமும் வரலாற்றை பறை சாட்டுவது தெரியும்.

பாதை அமைத்த திறமைசாலிகள்:

எவ்விதமான தொடர்பும் இல்லாத காலகட்டத்தில் தரை மட்டத்தில் இருந்து பல ஆயிரம் அடி உயரத்தில் பாதை அமைத்த திறமை தெரியும்.

பாயும் நதியின் மேல் பாலம்:

இதனை தாண்டும்போது அழகாய் ஓடி கேரளத்தை நோக்கி பாயும் நதி. அதனை ஓட்டி சாலை, அதனை தொட்டற்போல் தரை மட்டத்தில் இருந்து சுமார் 80 அடி உயரத்தி்ல் 13 வாயிற்கொண்ட கற்களால் கட்டப்பட்ட இராட்சத பாலம். இதில் ரயில் ஊர்ந்து செல்லும்போது ஆயிரம் கண்கள் வேண்டும் இந்த அழகிய காட்சியை காண்பதற்கு.

அனைத்து பெட்டிகளும் தெரியும்:

இப்பாதையில் ரயில் செல்லும்போது அனைத்து பெட்டிகளை டிரைவரும், கடைசி பெட்டியில் இருக்கும் கார்டும் பார்க்க முடியும்.

3 ஓவர் பிரிட்ஜ்கள்:

செங்கோட்டை-புனலூர் தடத்தில் 9 லெவல் கிராசிங்கள் உள்ளன. இதில் ஆளில்லாத ரயில் கேட் 6ம், ஆள் உள்ள ரயில்வே கேட் 3ம் உள்ளன. இத்தடத்தில் 3 ரோடு ஓவர் பிரிட்ஜ்களும் உள்ளன.

கடல் மட்டத்தில் இருந்து 280 அடி:

தென்மலை 13 கண் பாலம் 102.72 மீட்டர் நீளமும், 5.18 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது. ஆரியங்காவு குகை கடல் மட்டத்தில் இருந்து 280 அடி உயரத்தில் அமைய பெற்றுள்ளது.

வெள்ளிக் காசுகளால் அமைந்த பாதை:

இந்த ரயில் பாதை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்ட பின் வனப்பகுதியை சுத்தம் செய்ய ஆட்கள் இன்றி தவித்த ஆங்கிலேயர்கள் அப்பகுதிகளில் வெள்ளி காசுகளை அள்ளி வீசியுள்ளனர். அந்த தகவலை மக்களிடம் பரப்பியுள்ளனர். அதன்பின் மக்கள் காடுகளை சுத்தம் செய்து காசுகளை பொறுக்கியுள்ளனர். இப்படிதான் இந்த பாதை உருவான வரலாறுகள் கூறப்படுகிறது.

அகல ரயில் பாதை போக்குவரத்து:

இப்படி பல்வேறு சிறப்புக்களை கொண்ட இந்தப்பாதை மீட்டர் கேஜ் பாதையாக இருந்து போக்குவரத்து நடந்து வந்தது.இந்த தடத்தை அகல ரயில் பாதையாக மாற்றிட 350கோடிரூபாய் செலவில் 1997ஆம் ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கி விருதுநகர் முதல் செங்கோட்டை வரையிலும்,கொல்லம் முதல் புனலூர் வரையிலும் பணிகள் முடிந்து போக்குவரத்து நடந்துவருகின்றன.

கடைசி ரயில் பயணம்:

விருதுநகர் -கொல்லம் அகல ரயில் பாதைதிட்டத்தின் கடைசி பகுதியாக செங்கோட்டை-புனலூர் அகலரயில் பாதை திட்டம் இருந்தது.செங்கோட்டை-புனலூர் இடையே ஓடிக்கொண்டிருந்த மீட்டர் கேஜ் ரயில் 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி இருமாநிலத்தின் பல இலட்சம் மக்களின் அமோக ஆரவாரத்தோடும்,அவர்களின் ஆனந்த கண்ணீரோடும் இந்த ரயில் தனது இறுதிப் பயணத்தை செங்கோட்டையில் நிறுத்திக் கொண்டது.

4 ஆண்டுகளாய் நிறுத்தம்:

சுமார் 50.5கிலோ மீட்டர் தொலைவுக் கொண்ட இந்த தடத்தில் 2013ஆம் ஆண்டுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு மீண்டும் ரயில் போக்குவரத்து நடைப்பெறும் என்று தென்னக ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டது.ஆனால் ரயில் போக்குவரத்தை இந்த தடத்தில் நிறுத்தி இன்றோடு 4 ஆண்டுகள் ஆகிறது.

மீண்டும் வேண்டும் ரயில் பயணம்:

இதுவரை செங்கோட்டையில் இருந்து பகவதிபுரம் வரை மட்டுமே பாதை அமைக்கப்பட்டுள்ளது.4 ஆண்டுகளில் சுமார் 7கிலோ மீட்டர் மட்டுமே பாதை அமைக்கப்பட்டுள்ளது.இன்னும் 43கிலோ மீட்டர் தூரம் வரை சின்ன சின்ன பணிகள் மட்டுமே நடைப்பெற்று வருகின்றன. இத்தடத்தில் வரலாற்றுச் சிறப்புகள் கொண்ட ரயிலின் பயணம் மீண்டும் தொடர அரசு வழிவகை செய்ய வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+