திறந்து கிடந்த ரயில்வே கேட்... இறங்கி மூடி விட்டு ரயிலை ஓட்டிச் சென்ற டிரைவர்!
கடையநல்லூர்: நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே, மங்களபுரம் ரயில்வே கேட் மூடாமல் திறந்து கிடந்ததால் பெரும் விபத்திலிருந்து செங்கோட்டை - மதுரை பாசஞ்சர் ரயில் தப்பியது.
செங்கோட்டையிலிருந்து தினமும் காலை 7மணிக்கு மதுரைக்கு பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல் ரயில் கடையநல்லூர் மங்களபுரம் அருகே வந்தபோது ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த என்ஜின் டிரைவர் ரயிலின் வேகத்தை குறைத்தார்.
மேலும் கேட்டுக்கு பத்தடி தூரத்தில் ரயிலை நிறுத்தி விட்டார் டிரைவர். பின்னர் டிரைவர் கீழே இறங்கி இருபுறமும் செயின் மூலம் கேட்டை அடைத்துவிட்டு ரயிலை தொடர்ந்து இயக்கினார். ரயில்வே கேட்டில் பணியாளர் இல்லாதால் ஒரு மணிநேரம் ரயில் தாமதமாக சென்றது மட்டுமின்றி விவசாயப் பகுதியான இந்தப் பகுதியிலிருந்து எராளமான வாகனங்கள் வருவது வழக்கம். ஆனால் இன்று அதிர்ஷ்ட வசமாக எந்த வாகனமும் வராததால் பெரும் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.