ஜல்லிக்கட்டு காளைகளை கோசாலைகளுக்கு அனுப்புங்கள்: ராம.கோபாலன்
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, காளைகள் கசாப்பிற்கு விற்கப்படுவதை தடுக்க, தமிழக அரசு காளைகளை மீட்டு கோசாலைகளுக்கு அனுப்ப வேண்டும் என இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழர் வீரவிளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு சமீபத்தில் நீதிமன்றத் தடை விதிக்கப் பட்டது. தடைக்கு எதிராக தமிழக அரசு முறையீடு செய்ய வேண்டும் என பலதரப்பிலிருந்தும் குரல்கள் எழுப்பப் பட்டு வருகின்றன.
இதற்கிடையே, ஜல்லிக் கட்டுக் காளைகள் கேரளாவிற்கு இறைச்சிக்காக விற்கப் படுவதாக சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால், கசாப்பிற்கு செல்லும் காளைகளை காப்பாற்றி கோசாலைக்கு அனுப்ப வேண்டும் என ராம்.கோபாலன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :-
கசாப்புக் கடைக்கு விற்கப்படும் காளைகள்...
ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்ததை அடுத்து, ஜல்லிக்கட்டு போட்டிக்காக வளர்க்கப்படும் காளைகள் கசாப்பிற்கு விற்பது குறித்து பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
நமது கடமை...
விவசாயிகளின் முதுகெலும்பும், சுற்றுச்சூழலுக்கு வளம்சேர்ப்பதும் காளைகள், பசுக்கள். இவற்றை பாதுகாப்பது நமது கடமையாக நினைக்க வேண்டும். பராமரிக்க இயலாதவர்கள் கோசாலைவிற்க்கு அனுப்ப வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
நடவடிக்கை...
ஜல்லிக்கட்டு காளைகள் கசாப்பிற்கு விற்பதை உடனடியாக தடுத்து நிறுத்த பராமரிக்க இயலாதவர்களிடம் இருந்து காளைகளை விலை கொடுத்து வாங்கி அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்படும் கோசாலைகளுக்கு அனுப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேல்முறையீடு...
மேலும் அனைத்துத் தரப்பினரையும் அழைத்துப்பேசி, ஜல்லிக்கட்டுப்போட்டி நடைபெற தேவையான திருத்தங்களை வரைமுறைப்படுத்திட முன்வரவேண்டும். மேலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, தடை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறுகிய கால குத்தகை...
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தரிசு நிலங்களில் கிழங்கு வகைகளைப்பயிரிட ஏழைகளுக்கு குறுகிய கால குத்தகையாக அளிக்க தமிழக அரசு முன்வரவேண்டும். கிழங்குவகை பயிர்களுக்கு அதிக தண்ணீர் தேவைப்படாது. குறுகியகாலத்திற்கு குத்தகைக்கு கொடுத்துத் திரும்ப பெறும் வகையில் நிர்வாகம் செய்தால், மக்களுக்கும் பயன்படும், பினாமிகள் கையில் அரசு நிலங்கள் சிக்கமாலும் காத்திடலாம். எனவே தமிழக அரசு ஏழை விவசாயிகளுக்கு குறுகிய கால குத்தகைக்கு அரசு தரிசு நிலங்களை அளிப்பது குறித்த நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.