நிர்மலா தேவி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யார்? யார்? கைது செய்யப்பட்ட முருகனிடம் தீவிர விசாரணை
நிர்மலா தேவி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் குறித்து கைது செய்யப்பட்ட முருகனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விருதுநகர் : பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், கைது செய்யப்பட்ட உதவிப் பேராசிரியர் முருகனிடம், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் குறித்து சிபிசிஐடி போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளிடம் பேசி அவர்களை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரத்தில் அவரிடம் சிபிசிஐடி போலீஸார் 5 நாட்கள் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.
நிர்மலாதேவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மதுரை பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் முருகனை கைது சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் தேடப்பட்டு வந்த முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி நீதிமன்றத்தில் சரண் அடைந்ததையடுத்து, இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள முருகனுக்கு 5 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, அவரிடம் நேற்று சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். இன்றும் 2வது நாளாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த விசாரணையில், மதுரை பல்கலைக்கழக அதிகாரிகளுடனான தொடர்பு குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும், செல்போன் ஆதாரங்களை வைத்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், முருகன் மற்றும் கருப்பசாமியிடம் நடத்தபடும் விசாரணையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய முக்கியப் பிரமுகர்கள் யார் யார் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.