பிஆர்பி நரபலி குறித்து புகார் கூறிய சேவற்கொடியோன் வீட்டில் தீவைப்பு... 2 பேர் மீது போலீஸில் புகார்
மதுரை: மதுரை பிஆர்பி கிரானைட்ஸ் நிறுவனத்தினர் நடத்தியதாக கூறப்படும் நரபலி தொடர்பாக போலீஸில் புகார் அளித்துப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவரான சேவற்கொடியோனுடைய வீட்டின் பின்புறம் இருந்த கூரை திடீரென தீப்பிடித்து எரிந்த விவகாரம் தொடர்பாக பிஆர்பி நிறுவனத்தைச் சேர்ந்த 2 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிஆர்பி நிறுவனத்தில் டிரைவராக இருந்தவர் சேவற்கொடியோன். இவர் பின்னர் பணியிலிருந்து விலகி விட்டார். இந்த நிலையில் கடந்த ஆண்டு கிரானைட்ஸ் முறைகேடு தொடர்பான விசாரணையை மேற்கொண்ட ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திடம் புகார் ஒன்றை அளித்தார் சேவற்கொடியோன். அதில், பிஆர்பி நிறுவனத்தினர் புதிய திட்டத்தைத் தொடங்கும்போது நரபலி கொடுப்பது வழக்கம் என்றும் அந்த நரபலி கொடுக்கப்பட்ட இடத்தைத் தோண்டி எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து சகாயத்தின் நேரடி மேற்பார்வையில் சம்பந்தப்பட்ட இடம் தோண்டி எடுக்கப்பட்டது. அப்போது பல எலும்புக் கூடுகள் சிக்கியதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் நரபலி கொடுக்கப்பட்ட இடத்தில் சாட்சியங்களை அழிக்க பிஆர்பி நிறுவனத்தினர் முயல்வதாக சில நாட்களுக்கு முன்பு சேவற்கொடியோன் மீண்டும் புயலைக் கிளப்பியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று அவரது வீட்டின் பின்புறம் உள்ள கூரையில் திடீரென தீப்பிடித்தது. இத்தனைக்கும். இவரது வீட்டிற்கு 2 போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தீ உடனடியாக அணைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன காவலாளி முருகானந்தம் மற்றும் இன்னொருவர் மீது சந்தேகப்படுவதாக சேவற்கொடியோன் கீழவளவு போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications