தீ வைத்த காவலர்கள் மீது கடும் நடவடிக்கை, நடுக்குப்பத்தில் நிரந்தர மீன் சந்தை- ஓ.பன்னீர் செல்வம்
பொதுமக்களின் வாகனங்கள் மற்றும் குடிசைகளுக்கு தீ வைத்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் ஒ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
சென்னை: நடுக்குப்பத்தில் நிரந்தர மீன் சந்தை அமைக்கப்படும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சட்டசபையில் அறிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த 23ஆம் தேதி பல இடங்களில் வன்முறை வெடித்தது. திருவல்லிக்கேணியில் உள்ள ஐஸ்ஹவுஸ் காவல்நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. காவல்துறையினர் தடியடி நடத்தி வன்முறையாளர்களை விரட்டியடித்தனர்.

இந்த நிலையில் சில பகுதிகளில் காவலர்களே தீ வைத்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது. வாட்ஸ் அப், முகநூல் மூலமும் இந்த வீடியோ பதிவுகள் பரவின. பல தொலைக்காட்சி செய்தி சேனல்களிலும் இந்த காட்சிகள் பல முறை ஒளிபரப்பாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நடுக்குப்பம் மீன் சந்தை எரிந்து நாசமானது. இதனால் பல லட்சம் மதிப்புடைய பொருட்கள், மீன்கள் சேதமடைந்ததுடன், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதற்கு சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தமிழக சட்டசபையில் இன்று விதி எண் 110ன் கீழ் அறிக்கை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம், அறிக்கை வாசித்தார்.
சென்னை வன்முறை தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். போலீஸ் தடியடி, வன்முறை தொடர்பாக ஆணையம் விசாரணை நடத்தும். காவல்துறையினரின் அத்துமீறல் இருந்ததா என்பது குறித்தும் ஆணையம் விசாரணை நடத்தும். 3 மாதத்துக்குள் விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்படும் என்றார். தீ வைத்த காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு நடுக்குப்பத்தில் தாற்காலிக மீன் சந்தை அமைக்கப்படும். நடுக்குப்பம், அயோத்திகுப்பம், மாட்டான்குப்பம் மீனவர்களுக்கு உரிய மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்படும். நடுக்குப்பம், மாட்டான் குப்பம் மீனவர்களுக்கு ஆய்வுக்குப் பின், உரிய நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.
சென்னை நடுக்குப்பத்தில் ரூ.70 லட்சம் மதிப்பில் நிரந்தர, நவீன மீன் சந்தை அமைக்கப்படும் எனவும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சட்டசபையில் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications