தனியார் பள்ளிகளுக்கு வாடகைக்கு விடப்படும் மாநகராட்சிப் பள்ளிகள்... எதிர்த்து சைக்கிள் பேரணி!
சென்னை: தமிழகம் முழுவதும் மூடப்பட்டுள்ள அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.
தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல அரசுப் பள்ளிகளை மூடியுள்ளனர். பல பள்ளிகளை வேறு பள்ளிகளுடன் இணைத்து வருகின்றனர்.

இதுதவிர பல மாநகராட்சிகளில், மாநகராட்சி பள்ளிகள் பல மூடப்பட்டுள்ளன. அவற்றை வேறு பள்ளிகளுடன் இணைத்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளனர்.

மதுரையில் பிரபலமான அவ்வை மாநகராட்சி மகளிர் பள்ளியை மூடி விட்டு அந்த கட்டடத்தில் தனியார் பள்ளிக்கு வாடகைக்கு விட்டிருப்பதாக ஏற்கனவே அங்கு கொந்தளிப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், மூடப்பட்டுள்ள அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளை திறக்க வேண்டும், அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்தி, மாணவர் சேர்க்கைளை அதிகரிக்க வேண்டும், கல்வி உரிமைச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்எப்ஐ) சார்பில் வியாழனன்று 4 நாள் சைக்கிள் பிரசாரம் தொடங்கியது.
கோயம்பேடு மாநகரட்சி பள்ளி அருகே தொடங்கிய இந்த 4 நாள் சைக்கிள் பிரச்சார ஊர்வலத்தை கல்வியாளர்கள் வே.வசந்திதேவி, எஸ்.எஸ்.ராஜகோபாலன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆர்.வேல்முருகன், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஜோ.ராஜ்மோகன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.












Click it and Unblock the Notifications