தூத்துக்குடி.. போலீஸ் தடியடி.. ஷிப்பிங் கம்பெனி டிரைவருக்கு கோமா நிலையில் தீவிர சிகிச்சை!
ஷிப்பிங் கம்பெனி டிரைவருக்கு கோமா நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Recommended Video

தூத்துக்குடி: தூத்துக்குடியில் போலீஸ் நடத்திய தடியடியில், படுகாயமடைந்த ஷிப்பிங் கம்பெனி டிரைவர் தொடர்ந்து கோமா நிலையில் உள்ளதால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடியில் மக்கள் எழுச்சியின்போது நடைபெற்ற போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கி சூட்டிற்கு 13 பேர் உயிரிழந்தனர். அப்போது போலீசாரால் நடத்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் ஜஸ்டின் என்பவரது நிலை தற்போது மோசமாக உள்ளது. இவர் ஓட்டப்பிடாரம் அடுத்த கீழ முடிமண் கிராமத்தை சேர்ந்த பிரான்சிஸ் என்பவரது மகன் ஆவார். 29 வயதான ஜஸ்டின் பிளஸ் 1 வரை படித்துவிட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் ஷிப்பிங் கம்பெனி ஒன்றில் ஓட்டுனராக வேலை பார்த்தவர். இவருக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தநிலையில்தான் போராட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
போலீசாரின் தாக்குதலின்போது, ஜஸ்டின் 3-ம் மைல் பகுதியில் நின்றிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது போலீசார் ஜஸ்டின் மீதும் தடியடி நடத்தியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் அரசு மருத்துவமனையிலிருந்த தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் நேற்றுவரை ஜஸ்டினுக்கு சுயநினைவு திரும்பவில்லை என்பதால் அவரது குடும்பத்தினர் மிகுந்த மனவேதனையில் உள்ளனர். தீவிர சிகிச்சை அளித்தும் கோமா நிலையிலேயே ஜஸ்டின் உள்ளதாக அவர்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications