மதிமுகவுக்கும், சிவசேனாவுக்கும் என்ன பிரச்சினை...?
சென்னை: மது ஒழிப்புப் போராட்டங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் நேற்று திடீரென மதிமுக, சிவசேனா இடையே ஏற்பட்ட மோதல் சலசலப்பை ஏற்படுத்தியது. பலருக்கு என்ன பிரச்சினை என்பதே தெரியவி்ல்லை. ஆனால் மாணவர்கள் டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்க வேண்டும் என்று வைகோ கூறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே சிவசேனா கட்சியினர் போராட்டம் நடத்த தாயகம் வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று மாலை, சிவசேனா மாநில தலைவர் ராதாகிருஷ்ணன், பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் அக்கட்சியினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் அங்கு போலீஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார்கள்.

பின்னர் செய்தியாளர்களிடம் இவர்கள் பேசுகையில், மதிமுக. பொதுச்செயலாளர் வைகோ, தமிழகத்தை வன்முறைக் களமாக மாற்றும் முயற்சியில் இறங்கி உள்ளார். மாணவர்களையும், இளைஞர்களையும் மதுக்கடைகளை உடைக்க சொல்லி தூண்டி விடுகிறார். இதன் மூலம் மாணவர் சமுதாயத்தை படிக்க விடாமல் கெடுக்கிறார்.
அவரது இந்த செயலை கண்டிக்கும் வகையில், மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தின் முன்பு கூடி ஜனநாயக முறையில் முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தோம். இதற்காக எங்கள் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ.அலுவலகம் அருகே கூடினார்கள்.
அவர்களை, மதிமுக அலுவலகத்தில் இருந்து திரண்டு வந்த அந்த கட்சியின் தொண்டர்கள் உருட்டு கட்டை போன்ற ஆயுதங்களுடன் தாக்க முற்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். இது தொடர்பாக நாங்கள் புகார் எதுவும் கொடுக்கவில்லை. எங்கள் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி பின்னர் அறிவிப்போம் என்றனர்.












Click it and Unblock the Notifications