தீவிரமடையும் ஜல்லிக்கட்டுப் போராட்டம்.. மதுரை அருகே 60 கிராமங்களில் கடையடைப்பு
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரும் போராட்டங்கள் தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளன. மதுரை அருகில் உள்ள 60 கிராமங்களில் கடையடைப்பு போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
மதுரை: மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் வலுவாக நடைபெற்று வருகின்றன. இன்று மேலூர் அருகில் உள்ள சுமார் 60 கிராமங்களில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
பொங்கல் திருநாளுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாத ஜல்லிக்கட்டு விளையாட்டை இந்த ஆண்டாவது நடத்த வேண்டும் என்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் உறுதியாக உள்ளனர்.
ஆனால் அதனை நடத்துவதற்கான எந்த முயற்சிகளையும் மத்திய அரசு செய்யவில்லை. மேலும், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் தீர்ப்பு வந்த பிறகுதான் எதுவாக இருந்தாலும் செய்ய முடியும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
கடைகள் அடைப்பு
இந்த நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ள வெள்ளலூர் மற்றும் அதனைச் சுற்றி இருக்கின்ற 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் அந்தந்த ஊர் கடைகளை அடைத்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவானப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம்
பொங்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 60 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளலூர் என்றப் பகுதியில் ஒன்று கூடி மேலூரில் உள்ள பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
தன்னெழுச்சி
வெள்ளலூர், கோட்டநத்தம் பட்டி, உறங்கான்பட்டி உள்ளிட்ட 60 கிராமங்களைத் சேர்ந்தத் தலைவர்களே தன்னெழுச்சியாக இந்தப் போராட்டத்தை வழிநடத்திச் செல்கின்றனர்.
மாணவர்கள்
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குவதற்கான போராட்டம் மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் என தன்னெழுச்சியாக ஒன்றிணைந்து இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் எந்த அரசியல் மற்றும் சமுதாயத் தலைவர்கள் முன்னெடுக்காத போராட்டமாகவே இது உள்ளது.