ஹெல்மெட் வாங்க படையெடுத்த மக்கள் கூட்டம்.. 3 மடங்கு விலை வைத்து கல்லா கட்டிய கடைக்காரர்கள்..
சென்னை: ஹெல்மெட் வாங்க குவிந்த கூட்டத்தை பயன்படுத்தி கொண்ட கடைக்காரர்கள், மூன்று மடங்கு விலை வைத்து தரமில்லாத ஹெல்மெட்டுகளை விற்பனை செய்தனர். தமிழகம் முழுவதும் இதே காட்சிகளைக் காண முடிந்தது.
தமிழகத்தில், இன்று முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களின் லைசென்ஸ் ரத்து செய்ய பரிந்துரைத்தும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் நேற்று ஹெல்மெட் விற்பனை சக்கை போடு போட்டது. கடந்த மே மாதம் வரை, 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஹெல்மெட் தற்போது, 1,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதிலும், தரமில்லாத பல ஹெல்மெட்டுகள் வாகன ஓட்டிகளிடம் கூடுதல் விலைக்கு தள்ளிவிடப்பட்டன.
சாலையோரம் மற்றும் ஆங்காங்கே உள்ள கடைகளில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ஹெல்மெட் விற்பனை நடந்து வருகிறது. இன்று முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதால், வாகன ஓட்டிகள் பலர் நேற்று ஹெல்மெட் கடைகளை நோக்கி படையெடுத்தனர்.

இதை பயன்படுத்தி கொண்ட கடைக்காரர்கள், மூன்று மடங்கு கூடுதல் விலை வைத்து ஹெல்மெட்டுகளை விற்பனை செய்தனர். இதுதவிர ஐ.எஸ்.ஐ., தரமில்லாத ஹெல்மெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டன.
வாகன ஓட்டிகள், போலீஸாருக்கு கப்பம் கட்டுவதை விட, தரமில்லாத ஹெல்மெட்டுகளை வாங்கி செல்வோம் என்ற நினைப்பில், 500 ரூபாய் கூட பெறாத ஹெல்மெட்டுகளை, 1,000 முதல் 1,500 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கிச் சென்றதை பார்க்க முடிந்தது.












Click it and Unblock the Notifications