சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு பதிலடி... 7 திமுக எம்.எல்.ஏக்கள் அதிரடி சஸ்பென்ட்?
சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு பதிலடியாக 7 திமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பென்ட் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 7 தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சஸ்பென்ட் செய்யப்படலாம் என தெரிகிறது. திமுகவின் 7 எம்.எல்.ஏக்களுக்கு திடீரென உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சட்டசபையில் கடந்த மாதம் 18-ந் தேதியன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரி திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இந்த களேபரத்தின் போது சபாநாயகர் இருக்கையில் திமுக எம்.எல்.ஏக்கள் கு.க. செல்வம், ரங்கநாதன் உள்ளிட்டோர் அமர்ந்து ரகளையில் ஈடுபட்டனர். அத்துடன் சட்டசபைக்குள்ளேயே அமர்ந்து தர்ணா போராட்டமும் நடத்தினர்.
ஸ்டாலின் மீது தாக்குதல்
இதையடுத்து சட்டசபை மார்ஷல்கள் சீருடை அணிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர். அப்போது ஸ்டாலின் தாக்கப்பட்டதாகவும் அவரது சட்டசை கிழிக்கப்பட்டதாகவும் பஞ்சாயத்து எழுந்தது.
நம்பிக்கையில்லா தீர்மானம்
இதனைத் தொடர்ந்து சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை திமுக கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தின் மீது வரும் 23-ந் தேதி விவாதம் நடைபெற உள்ளது.
திடீர் உரிமை மீறல் நோட்டீஸ்
திமுகவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக திடீரென அக்கட்சியின் 7 எம்.எல்.ஏக்களுக்கு சட்டசபையின் மாண்பை குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறி உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சபாநாயகர் இருக்கையில் வேண்டுமென்றே அமர்ந்த ரங்கநாதன் எம்.எல்.ஏ.வுக்கு நோட்டீஸ் போகவில்லை.
சஸ்பென்ட்?
இந்த உரிமை மீறல் நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் நடைபெறும் நாளில் திமுகவுக்கு அதிர்ச்சி தரும் வகையில் இந்த 7 எம்.எல்.ஏக்களும் சஸ்பென்ட் செய்யப்படக் கூடும் என்றே கூறப்படுகிறது.