திருவள்ளூர்: சிக்னல் கோளாறினால் மின்சார ரயில்கள் தாமதம்: பயணிகள் தவிப்பு!
சென்னை: திருவள்ளூரில் ஏற்பட்ட சிக்னல் கோளாறால், அரக்கோணம்-சென்னை இடையே இயக்கப்படும் புறநகர் ரயில்கள் சுமார் 1.15 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூர் மார்க்கமாக சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்திற்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களை நம்பி தான் திருவள்ளூர், செவ்வாய்ப்பேட்டை, திருநின்றவூர், நெமிலிச்சேரி, பட்டாபிராம், ஆவடி,அன்னனூர், திருமுல்லைவாயில், அம்பத்தூர், பட்டரவாக்கம், கொரட்டூர், வில்லிவாக்கம்,பெரம்பூர் கேரேஜ், பெரம்பூர் லோகோ, பெரம்பூர், வியாசர்பாடி, பேசின் பிரிட்ஜ் போன்ற பகுதியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்னைக்கு அலுவலகம், பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இன்று காலை சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் ரயிலுக்காக காத்திருந்த மக்கள், எதனால் ரயில் தாமதம் ஆகிறது என்று தெரியாமல் தவித்து வந்தனர்.
ஒன்றரை மணிநேரம் தவிப்பு
காலை 6 மணிக்கு வேப்பம்பட்டுக்கு வரவேண்டிய ரயில், சுமார் 7.20 மணிக்கு தான் வந்தது. வந்த ரயிலிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மக்கள் இதனால் தவித்தனர். ஏராளமான மக்கள் ரயிலில் ஏற முடியாமல் மாற்று ரயிலுக்கு காத்து கொண்டிருந்தனர். சுமார் 1.15 மணி நேரத்திற்கு பிறகு ரயில் போக்குவரத்து சீரடைந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
காத்திருந்த பயணிகள்
திருவள்ளூர், திருநின்றவூர், ஆவடி, அம்பத்தூர், வில்லிவாக்கம், பெரம்பூர் ரயில் நிலையங்களில் மட்டுமே ஒலி பெருக்கி மூலம் பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இந்த ரயில் நிலையங்களுக்கிடையே உள்ள புட்டலூர்,செவ்வாய்ப்பேட்டை, வேப்பம்பட்டு, நெமிலிச்சேரி, பட்டாபிராம், அன்னனூர்,திருமுல்லைவாயில், பட்டரவாக்கம், கொரட்டூர் ஆகிய ரயில் நிலையங்களில் ஒலி பெருக்கி மூலம் ரயில்கள் தாமதம் பற்றியோ, சிக்னல் கோளாறு ஏற்பட்டாலோ ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளுக்கு எந்தவித தகவலும் தெரிவிக்கப்படுவதில்லை.
பயணிகள் கோரிக்கை
இந்த ரயில் நிலையலிங்களில் ஒலி பெருக்கி இருந்தும் அவை செயல்படாமலே இருக்கிறது. இது குறித்து ரயில் நிலையங்களில் இருக்கும் சிக்னல் பொறுப்பாளர்களிடம் கேட்டால் எங்களுக்கும் இதுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்று கூறுகின்றனர்.
சம்மந்தப்பட்ட ரயில் நிலையங்களில் இருக்கும் ஒலி பெருக்கிகளை உடனே ரயில்வே நிர்வாகம் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் ரயில் பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
தென்மாவட்ட ரயில்கள்
இதேபோல் மதுரையில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு காலை 5.30 மணிக்கு வந்து சேரவேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 6.30 மணிக்கு வந்து சேர்ந்தது. இதன் காரணமாக தென்மாவட்ட ரயில்களலான கன்னியாகும், திருநெல்வேலி உள்ளிட்ட அனைத்து ரயில்களும் தாமதமாகவே ரயில் நிலையத்தை வந்தடைந்தன.