தி.மு.க.விடம் விழுந்து விடாதீர்கள்: விஜயகாந்துக்கு தமிழருவி மணியன் அறிவுரை

அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பாஜகவுடன் ம.தி.மு.க. தொகுதிப் பங்கீடு செய்வதற்கான பேச்சுவார்த்தைத் தொடங்கி விட்டது. காலம் மிக குறுகியது. இனியும் விஜயகாந்த் மவுனம் சாதிப்பது அழகன்று.
‘எல்லாக் கட்சிகளும் என்னிடம் பேசிக் கொண்டிருக்கின்றன' என்று சொல்வதில் எந்தப் பெருமையும் இல்லை. ஊழலுக்கு எதிராக யுத்தம் நடத்தப் போவதாக பிரகடனம் செய்திருக்கும் விஜயகாந்த் முன்பு, இரண்டே வாய்ப்புகள் தான் உள்ளன. ஒன்று, பாரதீய ஜனதா கூட்டணியில் இடம் பெற்று ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முயல வேண்டும். அல்லது தனியாக களம் இறங்க வேண்டும்.
நடக்கவிருப்பது நாடாளுமன்றத் தேர்தல் யார் பிரதமர் என்பது தான் மக்கள் முன் நிற்கும் ஒரே கேள்வி. மோடியா? ராகுலா? என்ற கேள்விக்கு விஜயகாந்த் விரைவில் விடை காண வேண்டும்.
மாநிலங்களவையில் ஒரு இடத்தைப் பெறும் ஆசையில் திமுகவிடம் இடறி விழுந்தால் அதற்குப் பின்பு ஊழலை எதிர்க்கும் தார்மீக வலிமையை விஜயகாந்த் முற்றிலுமாக இழந்து விடுவார். இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக முகம் காட்டியதால் தான் மக்களின் வரவேற்பு அவருக்கு வந்து வாய்த்தது
ஒரே நேரத்தில் இரண்டு எதிரிகளுடன் போரிடுவது வெற்றியைத் தராது என்றார் ஜெர்மனியின் இரும்பு மனிதர் பிஸ்மார்க். எப்படியாவது எழுந்து நிற்க முயலும் தி.மு.க.வை இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்திவிட்டால், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.விற்கு எதிராக வலிமையுடன் போராடுவதற்கான வாய்ப்பு கனியும்.
விஜயகாந்துக்கு இதற்கு மேல் சொல்வதற்கு என்னிடம் வார்த்தை இல்லை. இதுவே விஜயகாந்துக்கு நான் வழங்கும் இறுதியான வேண்டுகோள் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications