திடீரென பேச மறுத்ததால் ஆத்திரம்... 5 ஆண்டு காதலி முகத்தில் ஆசிட் வீசிய காதலன் கைது!
சீர்காழி: சீர்காழி அருகே பேச மறுத்த காதலி முகத்தில் ஆசிட் வீசிய காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே தாடாளன் காமராஜபுரம் தெற்கு தெருவில் வசிக்கும் கொத்தனார் வீரமணி என்பவரது மகள் சுபா (20). பிளஸ்-2 படித்துள்ள சுபா சீர்காழியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இவரும், சீர்காழியை அடுத்து பனமங்கலம் வடக்கு தெருவில் வசிக்கும் பெருமாள் மகன் தங்கபாண்டியனும் (27) கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தங்கபாண்டியன் சென்னையில் உள்ள டிராவல்ஸ் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். காதலர்கள் இருவரும் செல்போன் வாயிலாக தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சமீப காலமாக தங்கபாண்டியனுடன் செல்போனில் பேசுவதை சுபா தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தங்கபாண்டியன் நண்பர்கள் மூலம் நடத்திய விசாரணையில், சுபாவை அவரது உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடப்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து தங்கபாண்டியன் தனது உறவினர்களுடன் கடந்த 15-ந்தேதி சுபா வீட்டிற்கு சென்று பெண் கேட்டார். ஆனால், அதற்கு சுபாவின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த தங்கபாண்டியன் தனக்கு கிடைக்காத சுபா வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று முடிவு செய்தார்.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு ஆசிட்டுடன் சுபாவின் வீட்டிற்கு சென்று பின்புறத்தில் மறைந்திருந்தார். அப்போது அங்கு வந்த சுபாவின் முகத்தில் ஆசிட்டை ஊற்றி விட்டு தப்பி ஓடினார் தங்கபாண்டியன்.
வலியால் துடித்த சுபாவை குடும்பத்தார் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக சீர்காழி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அப்துல்கபூர், சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழ்செல்வி, ராஜேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தங்கபாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications