சிவகங்கை அரசு மகளிர் கல்லூரியில் புதிய "கல்வித் திட்டம்" அறிமுகம்.. "Entrance education"!
சிவகங்கை: சிவகங்கையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் போதிய வகுப்பறைகள் இல்லாத நிலை இருப்பதால் மாணவிகள் வகுப்பறையின் நுழைவாயிலில் அமர்ந்து படிக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் கூட போதிய ஆக்சிஜன் இல்லாமல் திணறும் நிலைதான் உள்ளது. தனியார் பள்ளி கல்லூரிகள் தாறுமாறாக நிதி வசூல் செய்து கட்டடங்களைக் கட்டிக் குவித்து விடுகின்றன. ஆனால் அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு அதுபோன்ற தாராள நிதி கிடைப்பதில்லை. இதனால் கட்டட வசதிகள் மிகவும் மோசமாகவே உள்ளன.
சிவகங்கையில் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் கிட்டத்தட்ட 2000 க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கிறார்கள். அனைவருமே சமூகத்தின் அடித்தட்டைச் சேர்ந்தவர்கள்.

பற்றாக்குறை கல்லூரி
இக்கல்லூரியில் மிகப் பெரிய அளவில் பல பற்றாக்குறைகள் உள்ளனவாம். 80க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 20க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் தேவைப்படுகின்றன. இதன் காரணமாக கல்லூரியில் ஷிப்ட் போட்டு வகுப்புகளை நடத்தி வருகின்றனராம்.

ஷிப்ட் போட்டு வகுப்பு
ஒரு ஷிப்ட் முடிந்தால்தான் அடுத்த ஷிப்ட்டுக்கு வரும் மாணவிகளுக்குப் பாடம் நடத்த முடியும். அவர்கள் உட்காரவும் இடம் கிடைக்கும். இப்படிப்பட்ட அவல நிலையில் இக்கல்லூரியில் மாணவிகள் படித்துக் கொண்டுள்ளனர்.

வகுப்பறை என்ட்ரன்ஸிலும் வகுப்பு
வகுப்பறை போதாத நிலையில் இருப்பதால் கிடைக்கும் இடத்தில் எல்லாம் மாணவிகளை அமர வைத்து வகுப்பெடுக்கின்றனர். மரத்தடி, வராண்டா, வகுப்பறை நுழைவாயில் என ஒரு இடம் கூட விடாமல் மாணவிகள் அமர வைக்கப்படுகின்றனர்.

15 வருடமாகி விட்டது
இதுகுறித்து மாணவர்கள் தரப்பில் கூறுகையில், இந்தக் கல்லூரி திறக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. ஆனாலும் இன்னும் போதிய வகுப்பறை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் இல்லை. அனைத்து துறைகளுக்கும் போதிய பேராசிரியர் இல்லாததால் மாணவிகள் கல்வி கற்பதில் சிக்கல் உள்ளது.

படிப்பு பாதிப்பு
இங்கு படிக்கும் மாணவிகளில் பலர், கிராமப்புறங்களில் இருந்து வரும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களால் படிப்பதற்கான வேறு வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியாது. கல்லூரிக்கு தேவையான வகுப்பறை கட்டிடம், பேராசிரியர் நியமனம் உள்ளிட்டவைகளை செய்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமுறினர்.

உதவிகள் தேவை
அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கல்லூரிக்கு பல்வேறு தரப்பினரும் தாராளமாக உதவிகள் செய்து கல்லூரி சிறப்பாக செயல்பட தங்களால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications