சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: படுகாயமடைந்தவர் மரணம்- 2 பேர் கைது
விருதுநகர்: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் படுபாயமடைந்த ஒருவர் இன்று மரணமடைந்தார் இவ்விபத்து தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் முதலிபட்டி அருகே தியாகராஜபுரத்தில் பட்டாசு ஆலை வைத்திருப்பவர் சவுந்திரபாண்டி யன்,77. பேன்சி ரக, சாதாரண ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்த பட்டாசுகள் அதிக சத்தத்துடன் வெடிப்பதாக, சிவகாசி வெடி பொருள் கட்டுப்பாடு அலுவலர்கள் கடந்த 5ம் தேதி பட்டாசு உற்பத்திக்கான அனுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த ஆலையில் ஏற்கனவே உற்பத்தி செய்த பொருட்களை ஒதுக்கி வைப்பதற்காக பெத்து செட்டிபட்டியை சேர்ந்த மாரிமுத்து,47 , கருந்திரி இருந்த அறையை சுத்தம் செய்தார். அப்போது கருந்திரிகள் எதிர்பாராத விதமாக உரசியதில் தீ பற்றியது பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் கட்டட ஆஸ்பெஸ்டாஸ் கூரை துாக்கி எறியப்பட்டது. மாரிமுத்து பலத்த காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு வந்த விருதுநகர் தீயணைப்புத்துறை அலுவலர் தங்கராஜன் தலைமையிலான ஊழியர்கள் கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைத்தனர்.
விபத்து நடந்த அறையில் பிடித்து போட்ட நிலையில் 3 பீடி துண்டுகள், புகைக்காத நிலையில் 2 பீடிகள், தீப்பெட்டிகளும் கிடந்துள்ளன. மாரியப்பன் பீடியை புகைத்து கொண்டே அறையை சுத்தம் செய்திருக்கலாம் என்றும் அதன் மூலம் தீ பிடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும், போலீசார் விசாரித்து வருகின்றனர்
பட்டாசு ஆலையின் உரிமம் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டதால் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. மாரிமுத்து மட்டும் காலை 7 மணிக்கே வேலைக்கு வந்து கருந்திரி அறைக்கு சென்றுள்ளார். அரை மணி நேரத்தில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. பொதுவாக எட்டு மணிக்கு மேல் தான் பணியாளர்கள் வேலைக்கு வருவர். அவ்வாறு வந்திருந்து விபத்து ஏற்பட்டிருந்தால் பெரியளவில் விபத்து ஏற்பட்டு இருந்திருக்கும்.
சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாரிமுத்து இன்று காலையில் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக போர்மென் முருகன், வேல் ஆகியோரை கைது செய்த போலீசார் , உரிமையாளர் சவுந்திர பாண்டியனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications