இலங்கை கடற்படையின் அராஜகம் தொடர்கிறது... ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு...
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை, இலங்கை மீனவர்கள் சிறைபிடித்துச் சென்றுள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கோபத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். அவர்கள், நேற்று இரவு பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 3 சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளில் ஏறி மீன்பிடி சாதனங்களையும் தேசப்படுத்தியதோடு, மீனவர்களையும் தாக்கியுள்ளனர்.
இதையடுத்து, ராமேஸ்வரத்தை சேர்ந்த சிங்கம்லியோன் என்பவரது படகினையும், அதில் இருந்த மகேஷ், கணேஷ், கேனோ உள்ளிட்ட 6 மீனவர்களையும் சிறை பிடித்து சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற மீனவர்கள் அவசர, அவசரமாக பாதியிலேயே மீன்பிடிப்பதை விட்டுவிட்டு கரை திரும்பினர். சிறை பிடித்து செல்லப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மீன்பிடி தடை காலம் முடிந்த, ஒரு வார காலத்தில் இது போல தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது 4-வது முறையாகும். இதுவரை மொத்தம் 21 தமிழக மீனவர்களையும், 4 விசைபடகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றிருப்பது தமிழக மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு ஒரே வாரத்தில் 3 முறை கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.