வேலூரில் மண்ணெண்ணெய் கொண்டு வந்து பள்ளியில் தீக்குளித்த மாணவி மரணம்
வேலூர்: வேலூர் அருகே 6ஆம் வகுப்பு மாணவி ஒருவர் புத்தக பையில் மண்ணெண்ணெய் எடுத்து வந்து பள்ளி கழிவறையில் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரின் மையப்பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1800க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
இன்று காலை பள்ளி துவங்கிய சிறிது நேரத்தில் பள்ளியில் உள்ள கழிவறையில் மாணவி ஒருவர் அலறும் சத்தம் கேட்டது. இதை கேட்ட தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது கழிவறைக்குள்ளே மாணவி தீக்குளித்து எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அவரை காப்பாற்ற முயன்றபோது கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. உடனே இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கழிவறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பலத்த தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாணவியை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் டிஎஸ்பி விஜயகுமார், ஆம்பூர் டிஎஸ்பி கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் தீக்குளித்து இறந்த மாணவி, பேரணாம்பட்டு டவுன் பகுதியை சேர்ந்த கண்ணபிரான் மகள் ஹரிணி(11) என்பது தெரியவந்தது. இவர் 6ம் வகுப்பு படித்து வந்துள்ளார். தாயாரை இழந்த இவர், தகப்பனார் கண்ணன், சித்தி ஆகியோரின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார். இன்று காலை பள்ளிக்கு வரும்போதே புத்தக பையில் மண்ணெண்ணெய் கேன் எடுத்து வந்து உடலில் ஊற்றி கொண்டு தீவைத்து இறந்துள்ளார்.
இவர் எதற்காக தீக்குளித்து இறந்தார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.