எங்கள் ஸ்லீப்பர் செல்கள் வெளியே வருகிறார்கள்... உண்மையை போட்டு உடைத்த சி.ஆர். சரஸ்வதி
எங்கள் ஸ்லீப்பர் செல்கள் வெளியே வருகிறார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜூ குறித்து சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
சென்னை: எங்கள் ஸ்லீப்பர் செல்கள் வெளியே வருகிறார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு தினகரன் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி புகழாரம் சூட்டியுள்ளார்.
சசிகலாவின் கணவர் நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்த்துக் கொள்வதற்காக பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார் சசிகலா.
சசிகலாவை அமைச்சர்கள் சந்திப்பார்களா? என்கிற கேள்வி எழுந்தது. இதுகுறித்து கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜூ ஒரு கருத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஆட்சி அமைய பாடுபட்டவர் சசிகலா. ஆனால் என்னுடைய விருப்பு வெறுப்புகளை அடக்கிக்கொண்டு ஜெயலலிதாவின் பிள்ளையாக இருக்கிறேன்.
இன்றைய சூழ்நிலையில் என் கருத்துகள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் துணை முதல்வர் ஓபிஎஸ்க்கும் பாதகமாக இருக்கக் கூடாது என கருதுகிறேன் என்றார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாக தினகரன் உள்ளிட்டோர் கூறி வந்தனர். ஆனால் இதை எடப்பாடி தரப்பினர் மறுத்து வந்தனர்.
இந்த நிலையில் செல்லூர் ராஜூவின் கருத்தை வரவேற்றுள்ளார் தினகரன் ஆதரவாளர் சி.ஆர். சரஸ்வதி. இது குறித்து சரஸ்வதி கூறுகையில் எங்களின் ஸ்லீப்பர் செல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியே வருகின்றனர். நன்றி மறவாத செல்லூர் ராஜூவுக்கு எனது பாராட்டுகள். அவர் கூறிய கருத்துகள் மனசாட்சிபடி கூறியதாகும். இன்னும் நிறைய பேர் வெளியே வருவார்கள் என்றார்.