அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ் ரூம்... ரூ.12 கோடி நிதி ஒதுக்கிய ஜெ!

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது:
பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் தாங்கள் கற்கும் கல்வியுடன், பொது அறிவான தாங்கள் வசிக்கும் மாவட்டம், மாநிலம், நாடு பற்றிய விவரங்களை நன்கு அறிந்திருக்க வேண்டியது அவசியம். இந்த அறிவு அவர்களுக்கு உயர் கல்வி பயிலும் போதும், பல்வேறு போட்டிகளில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுவதற்கும் உதவிகரமாக இருக்கும். இதனை அறிந்துக் கொள்ள மிகவும் உதவிகரமாக இருப்பது வரைப்படங்களேயாகும்.
எனவே, பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் 3,246 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 3 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான 48,247 வகுப்பறைகள் மற்றும் தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஒரு லட்சம் வகுப்பறைகள் என மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரத்து 247 வகுப்பறைகளுக்கும் தேசிய வரைபடம், தமிழ்நாடு வரைபடம் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட வரைபடம் என மூன்று வரைபடங்கள் வாங்கி மாட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக 11 கோடியே 56 லட்சத்து 32 ஆயிரத்து 660 ரூபாய் செலவிட முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார்.
அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனக் குழந்தைகளும் இடைநிற்றல் இன்றி கல்வி கற்று, சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், அவர்களுக்கு கட்டணமில்லா கல்வி, மதிய உணவு, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா கல்வி உபகரணங்கள் மற்றும் சீருடை, சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கற்பிப்பு கட்டணம் செலுத்துதல், ஊக்கத் தொகை வழங்குதல், தங்கிப் பயிலும் விடுதிகள் கட்டுதல் போன்ற எண்ணற்ற நலத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
கணினியின் இன்றியமையாத் தன்மையையும், தற்பொழுது பெரும்பான்மையான பணிகள் கணினியைச் சார்ந்தே அமைந்துள்ளது என்பதையும் கருத்தில் கொண்டு, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கணினி வழியில் கல்வி வழங்கி, தமிழகத்தில் கணினிப் புரட்சியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகின்றார்.
அந்த வகையில், மாணாக்கர்களுக்கு கணினி வழியாக கல்வி கற்பித்து அவர்களின் புரிதல் திறனை மேம்படுத்தும் வகையில் ‘ஸ்மார்ட் கிளாஸ் ரூம்' என்ற புதிய தொழில்நுட்பத்தினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 100 மேல்நிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் இப்பள்ளிகளில் ஏற்கெனவே இருக்கும் வகுப்பறைகளில் ஏதேனும் ஒரு வகுப்பறை ஸ்மார்ட் கிளாஸ் ரூம் ஆக மாற்றியமைக்கப்படும்.
இத்திட்டத்தின்படி கல்வி கற்பிக்க ஆர்வமுள்ள, இத்துறைப் பள்ளிகளில் ஏற்கெனவே பணிபுரியும் ஆசிரியர்களில், ஒரு பள்ளிக்கு இரண்டு ஆசிரியர்கள் வீதம் பயிற்சி அளிக்கப்படும்.
ஒவ்வொரு பள்ளியிலும் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அமைப்பதற்கு தேவையான கணினி உள்ளிட்ட அறிவியல் சாதனங்கள் வாங்கிட ஒரு பள்ளிக்கு 5,05,000 ரூபாய் வீதம் 100 பள்ளிகளுக்கு 5 கோடியே 5 லட்சம் ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications