மெர்சல் பட விவகாரத்தை ஊதி பெரிசாக்குகிறார்கள்... வானதி சீனிவாசன்
மெர்சல் பட விவகாரத்தை சிலர் ஊதி பெரிதாக்குகிறார்கள் என பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை: பாஜக எதை செய்தாலும் அதை எதிர்ப்பவர்கள்தான் மெர்சல் விவகாரத்தை பெரிதுப்படுத்துகிறார்கள் என பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்து அரசுக்கு எதிராக வசனங்கள் பேசியதற்கு தமிழக பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் பாஜக தலைவர்களுக்கு எதிராக நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தேசிய இளைஞர் கூட்டுறவுச் சங்கம் மூலம் விளையாட்டில் ஆர்வம் உள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை ஒலிம்பிக் போட்டிக்கு தயார் படுத்தும் நடவடிக்கை மாவட்டம் வாரியாக நடைபெற்று வருகிறது.
கோவையில் இன்று கிராமப்புற இளைஞர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் 7 மாவட்ட கிராமப்புற இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளை பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் மெர்சல் பட விவகாரம் குறித்து கூறுகையில், மெர்சல் படம் தொடர்பாக கருத்து தெரிவித்ததால் பாஜக கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக பலர் குற்றம்சாட்டி வருகிறார்கள். சினிமாவில் அரசியல் வசனம் பேசும் போது எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு படத்தின் வசனத்திற்காக அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. பாஜக எதை செய்தாலும் அதை எதிர்ப்பவர்கள்தான் தற்போது மெர்சல்பட விவகாரத்தை ஊதி பெரிதுபடுத்துகின்றனர் என்றார் அவர்.