டிஸ்சார்ஜ் ஆன பிறகு.. வீட்டுக்கு போய் மிச்சமிருந்த விஷ சாராயத்தை குடிச்சிருக்காங்க- அமைச்சர் திடுக்
கள்ளக்குறிச்சி: விஷச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்கள் மீண்டும் வீட்டில் மீதம் இருந்த சாராயத்தை குடித்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 51 பேர் உயிரிழந்த சூழலில், நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக ஐந்து தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக தற்போது வரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்ட 17 பேர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் துரைராஜை சந்தித்து, பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி: பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கள்ளக்குறிச்சியில் 9 பெண்கள், ஒரு திருநங்கை உள்ளிட்ட 168 பேர் இதுவரை பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற 2 ஊர்களைச் சேர்ந்தவர்கள், மருத்துவமனைக்கு வராமல், தங்களது வீடுகளிலேயே இருந்தனர். உடனே மாவட்ட சுகாதார அலுவலர் தலைமையிலான குழு மூலம் அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, 600 படுக்கைகளுடன் கூடிய பெரிய மருத்துவமனை. ஆனாலும் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரத்யேகமாக மேலும் 50 படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது. மெத்தனால் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக பார்வை பறிபோகும். இருதயம், சிறுநீரகம், கல்லீரல் படிப்படியாக செயலிழக்கும் என்பதால் அவர்களுக்கு தேவையான சிகிச்சை முறைகளை மருத்துவர்கள் சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பல்வேறு வகையான சிகிச்சைகளும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. மது அருந்தியவர்களின் உடலுறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்க ஆரம்பித்த பிறகுகூட, அவர்கள் மருத்துவமனைக்கு வர தயக்கம் காட்டியதால்தான் அதிக உயிரிழப்புகளை சந்திக்க நேர்ந்தது.
மீண்டும் வீட்டுக்கு போய் குடித்துள்ளனர்: விஷச்சாராயம் குடித்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் இவ்வளவு களேபரத்திற்கு பிறகும் மீண்டும் வீட்டில் மீதமிருந்த சாராயத்தை குடித்து மீண்டும் இன்று மதியத்திற்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அரசு என்னதான் சொன்னாலும் இப்படி அறியாத்தனமாக இருப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பெரிய அளவிலான விழிப்புணர்வு தேவைப்படுகிறது." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 'ஒமேப்ரஸோல்' மருந்து கையிருப்பில் இல்லை என்று குற்றம்சாட்டினார். உடனடியாக நான் அது குறித்து அதிகாரிகளுடன் ஆராய்ந்தபோது தமிழகம் முழுவதும் 4.42 கோடி மாத்திரைகள் கையிருப்பில் இருக்கிறது. இவ்வளவு மருந்து கையிருப்பில் இருக்கும்போது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக பேசுவது எதிர்கட்சித் தலைவருக்கு அழகல்ல. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மருந்து பற்றாக்குறை எனக் கூறியிருப்பதும் தவறான தகவல் எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications