பூந்தமல்லியில் பயங்கரம்... தந்தையை அடித்து கொலை செய்து விட்டு உடலை பாத்ரூமில் வைத்து பூட்டிய மகன்
குடித்துவிட்டு தகராறு செய்த தந்தையை கட்டையால் அடித்து கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.
பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே தந்தையை அடித்துக்கொன்று பாத்ரூமில் பூட்டிவைத்து விட்டு சென்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, மேப்பூர்தாங்கல், நேரு தெருவை சேர்ந்தவர் வீரராகவன் 55. கூலி வேலை செய்து வந்தார். இவரது மகன் கார்த்திக் 22. குடிப்பழக்கம் உடைய வீரராகவன் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் மகன்களுடன் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்த வீரராகவன் மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த அவரது மகன் கார்த்திக், வீரராகவனை கட்டையால் தாக்கி வீட்டில் இருந்த பாத்ரூமில் வைத்து பூட்டி விட்டு சென்று விட்டார்.
சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது வீரராகவன் இறந்து போய் இருந்தார்.
இதுகுறித்து நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீரராகவன் உடலை மீட்டு விசாரணை செய்தனர்.
மேலும் மகன் தாக்கியதால் தந்தை இறந்து போய் இருப்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குடிபோதையில் தகராறு செய்த தந்தையை மகனே அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.