அப்பா.... பாளை சிறையில் "அக்ரி"யை சந்தித்து ஆறுதல் சொன்ன மகன்கள்!
திருநெல்வேலி: முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அவரது மகன்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
நெல்லை வேளாண்மை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மைத்துறை தலைமை என்ஜீனியர் செந்தில் ஆகியோர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கைதான அக்ரிகிருஷ்ணமூர்த்தியும், வேளாண்மைத்துறை என்ஜீனியர் செந்திலும் வருமான வரி கட்டி வருவதால் தங்களை முதல் வகுப்பில் அடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று பாளை மத்திய சிறை ‘சி' பிளாக்கில் உள்ள 8வது எண் செல் வரிசையில் இவர்களுக்கு முதல் வகுப்பு தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

விசாரணைக்கைதி என்பதால், அவர்கள் தங்களது சொந்த உடையை அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அக்ரிகிருஷ்ணமூர்த்திக்கு கைதி எண் 7905ம், என்ஜீனீயர் செந்திலுக்கு கைதி எண் 7906ம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அடைக்கப்பட்டுள்ள இதே செல் வரிசையில் நக்சலைட் கைதி ரஞ்சித் என்பவரும் முதல் வகுப்பில் அடைக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை அக்ரிகிருஷ்ணமூர்த்தி, செந்தில் ஆகியோர் ஜெயில் வளாகத்திலேயே வாக்கிங் சென்றனர். பின்னர் காலை உணவாக இவர்களுக்கு சப்பாத்தி வழங்கப்பட்டது. மதியம் சைவ சாப்பாடு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அக்ரிகிருஷ்ணமூர்த்தியை அவரது மகன்கள் ஸ்ரீதர், அரவிந்தன் ஆகியோர் சந்தித்து பேசினர். மேலும் அவரது நண்பர் வெங்கடேசன், வக்கீல் கிளாஸ்டர் ஆனந்த் ஆகியோரும் சந்தித்து பேசினர். அப்போது ஜாமீன் மனு தாக்கல் செய்வது தொடர்பாக அக்ரிகிருஷ்ணமூர்த்தியுடன் ஆலோசனை நடத்தினர். அவருக்கு தேவையான பொருட்களை ஜெயில் விதிமுறைகளுக்கு உட்பட்டு வாங்கி கொடுத்தனர்.
இதேபோல முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வேளாண்மைத்துறை தலைமை என்ஜினீயர் செந்திலை அவரது உறவினர் ஒருவர் மற்றும் வக்கீல் மாணிக்கம் ஆகியோர் சந்தித்து பேசினர்.
சர்க்கரை நோய்
இதனிடையே கைதான முன்னாள் அமைச்சர் அக்ரிகிருஷ்ணமூர்த்தி மற்றும் தலைமை என்ஜீனியர் செந்தில் ஆகியோருக்கு சர்க்கரை நோய் மற்றும் நெஞ்சு படபடப்பு உள்ளதால், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க வேண்டும் என்று சிறை கண்காணிப்பாளர் கனகராஜிடம், கைதானவர்கள் சார்பாக மனு கொடுக்கப்பட்டது. இதை ஏற்று இன்று பாளையங்கோட்டை மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறை மருத்துவமனையிலேயே அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்காக, பாளை ஹைகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார்கள் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications