தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இணை இயக்குநர் ஸ்டெல்லா தெரிவித்துள்ளார்.
சென்னை: தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இணை இயக்குநர் ஸ்டெல்லா தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதேபோல் புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை முறையாக மழை பெய்யவில்லை. இந்நிலையில் தற்போது தொடங்கியிருக்கும் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
காற்றழுத்த தாழ்வு நிலை
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இணை இயக்குநர் ஸ்டெல்லா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை இலங்கை மற்றும் தமிழகத்திற்கு இடையே நீடிப்பதாக அவர் கூறினார்.
வட தமிழகத்தில் மிதமான மழை
இதன் காரணமாக நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு இயக்குநர் ஸ்டெல்லா தெரிவித்துள்ளார். வட தமிழகத்தில் உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
சென்னை புறநகர் பகுதியில் இடைவெளி விட்டு ஒரு சில முறை மழை பெய்யும் என்றும் அவர் கூறினார். கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இயல்பைவிட குறைவு
வடகிழக்கு பருவமழையானது, கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 27 சென்டி மீட்டர் பதிவாகியுள்ளது.இது இயல்பை விட இயல்பை விட 21 சதவீதம் குறைவு என்றும் அவர் கூறினார்.
கடந்த 24 மணி நேரத்தில்
கடந்த 24 மணி நேரத்தில் பரங்கிப்பேட்டை, சேத்தியாதோப்பில் தலா 4 சென்டிமீட்டரும் நாகப்பட்டினம், காரைக்கால், வேதாரண்யத்தில் 2 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.