தென் மேற்கு பருவமழை தொடங்கியது.. வானிலை மையம் தகவல்
தெற்கு அந்தமான் - நிகோபர் தீவுகளில் தென் மேற்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தெற்கு அந்தமான் - நிகோபர் தீவுகளில் தென் மேற்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு பருவமழை வழக்கமாக இந்தியாவில் ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கும். ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை 4 மாதங்கள் தென் மேற்கு பருவ மழை நீடிக்கும்.
ஜூன் 1ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்நிலையில் இந்த ஆண்டு சற்று முன்னதாக அந்தமான் நிகோபர் தீவுகளில் தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.
பருமழை தொடங்கியது
இதுதொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அப்போது தெற்கு அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.
48 மணி நேரத்தில்
அடுத்த 2 நாட்களில் தென் தமிழகத்தின் அனேக இடங்களில் மழை பெய்யும். 48 மணி நேரத்தில் குமரிக்கடலில் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை உள்ளது.
வட தமிழகத்தில் மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வட தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.
பலத்த காற்றுடன் மழை
தமிழகத்தின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக கூறினார். அடுத்த 48 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.
மீனவர்கள் செல்ல வேண்டாம்
கன்னியாகுமரி, லட்சத்தீவு, கேரளா கடல் பகுதிகள் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மே 30 ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் திருவையாறில் 8 சென்டி மீட்டர் மழையும் சிவகங்கையில் 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.