தீவிரமடையும் தென் மேற்குப் பருவ மழை.. 100 அடியைத் தாண்டியது அடவிநயினார் நீர்த்தேக்கம்
தென்மேற்கு பருவமழை காரணமாக அடவிநயினார் அணை 100 அடியை தாண்டியது.
நெல்லை: நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மாலை நேரங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தமிழகத்திலும் தென் மேற்குப் பருவமழை சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் மேக்கரை பகுதியில் அமைந்துள்ளது அடவி நயினார் நீர்த்தேக்கம். இந்த அணையின் முழு கொள்ளளவு 132 அடியாகும்.

அடவிநயினார் டேம்
இந்த நீர்த்தேக்கத்தின் மூலம் கரிசல்கால் மற்றும் மேட்டுக்கால் ஆகிய கால்வாய்கள் மூலம் நேரடி மற்றும் மறைமுகமாக 58 குளத்தின் மூலம் சுமார் 7500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

நீர்வரத்து அதிகரிப்பு
தற்போது கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் துவங்கி உள்ளதால் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து அடவிநயினார் நீர்த்தேக்கத்திற்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.

102 அடி நீர்
இதனால் அணைக்கு விநாடிக்கு 258 கன அடி நீர் உள்ளே வந்தும், சுமார் 5 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணை நீர் மட்டம் படிப்படியாக அதிகரித்து செவ்வாய்கிழமை காலை 10 மணி நிலவரப்படி நீர்த்தேக்கத்தில் 102.5 அடி நீர் உள்ளது.

விவசாயிகள் குஷி
தொடர் மழையின் காரணமாக அணை விரைவாக நிரம்பி வருவதால் அணையின் கீழ் பாசன வசதி பெரும் விவசாயிகள் கார் சாகுபடிக்கான துவக்க பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சாரல் மழை தீவிரமாக பெய்து வருவதால் இன்னும் ஒரு சில தினங்களில் அணை தனது முழு கொள்ளளவை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications