வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு.. தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வட கிழக்கு பருவமழை முடிவடைய 4 நாட்களே உள்ள நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: தென் மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிப்பதால், தமிழ்நாட்டில் தென் கடலோர மாவட்டங்களில் இன்று முதல் 30ம் தேதி வரை சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது: வட கிழக்கு பருவமழை வழக்கமாக டிசம்பர் 31ம் தேதி முடிவடையும். வடகிழக்கு பருவமழை முடிவடைவது குறித்து இந்திய வானிலை மையம் தெரிவித்த பிறகுதான் நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.
இந்நிலையில் தற்போது, தென் மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலை கொண்டு உள்ளது. அது வலுவற்ற நிலையில் உள்ளது. குளிர் அதிகமாக இருப்பதால் தென் கடலோர மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை முதல் 30ம் தேதி வரை சில இடங்களில் மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை தான் நிலவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை இந்த வருடம் தாமதமாக தொடங்கியது. மேலும், வடகிழக்கு பருவமழை போதிய அளவுக்கு பெய்யவில்லை. வார்தா புயல் சென்னையை கடந்து சென்றதால் ஓரளவுக்கு சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.