24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்.... வானிலை ஆய்வு மையம் கூல் அறிவிப்பு
Recommended Video
சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வழக்கமாக ஜூன் மாத தொடக்கத்தில் தொடங்கும் தென்மேற்குப் பருவமழை மூலமே, 70 சதவீத மழைப்பொழிவை இந்தியா பெறுகிறது. வரும் 6ஆம் தேதி கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டது. இயல்பை விட 23 சதவீதம் அதிகமான மழை அங்கு பதிவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்தநிலையில், இந்தாண்டு மழை கேரளாவில் இயல்பை விட குறைவாகவே பதிவாகும் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கனமழைக்கு வாய்ப்பு
இதற்கிடையே, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

வெப்பம் அதிகரிக்கும்
உள் தமிழகத்தில், இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்ற வானிலை மையம் திருச்சி, மதுரை, திண்டுக்கல், நாமக்கல், கரூர், பெரம்பலூர், சேலம் ஆகிய இடங்களில் வெப்பம் அதிகரிக்கும் எனவும் தெரிவித்தது.

அதிகபட்சமாக மழை
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் ஏழு செ.மீ மழை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நம்பிக்கை
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கினால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்து, அதையொட்டியுள்ள தமிழக பகுதிகள் பயன் பெறும். முல்லைப் பெரியாறு உள்ளிட்ட அணைகளும், குமரி மாவட்டத்தின் நீராதாரங்களும் தென்மேற்குப் பருவமழையால் பயன்பெறும். கடந்த 4 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் சராசரியை விட குறைவாகவே மழை பதிவாகும் நிலையில், இந்தாண்டு, மாற்றம் என மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications