சீன பட்டாசா?!- கண்டறிய முடியாமல் அலறும் தனிப்படையினர்
நெல்லை: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சீன பட்டாசுகளை இனம் காண முடியாமல் தனிப்படையினர் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை வரும் 10 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

தீபாவளியை ஓட்டி இந்த ஆண்டு பட்டாசு விற்பனை கடந்த 10 நாட்களுக்கு முன்பே தொடங்கி விட்டது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு பட்டாசு விலை உயர்ந்து விட்டது. இதனால் மலிவு விலையில் கிடைக்கும் சீன பட்டாசுகளை தமிழகத்தில் சில வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் சீன பட்டாசுக்கு தடை விதித்திருந்தாலும் சில கடைகளில் மறைமுகமாக விற்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளன.
இதையடுத்து தமிழக அரசு சீன பட்டாசுகள் விற்பனையை தடுக்க மாவட்டம் தோறும் தனிப்படைகளை அமைக்க உத்தரவிட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாலுகாவிலும் தாசில்தார், தீயணைப்பு துறை அதிகாரி, மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் அனைத்து பட்டாசு கடைகளிலும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தனிப்படையினர் தீவிரமாக சோதனை நடத்தியும் சீன பட்டாசுகளை பிடிக்க முடியவில்லை.
இதற்கு காரணம் குழுவில் இருக்கும் தனிப்படையினருக்கு சீன பட்டாசு எப்படி இருக்கும் என்றே தெரியவில்லை. பட்டாசு பெட்டிகளின் மேல் சீன எழுத்துகள் இருந்தால் மட்டுமே அது சீன பட்டாசு என்று நினைத்து சோதனை நடத்தி வருகின்றனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்ட தனிப்படையினர் பட்டாசு பெட்டிகளின் மேல் டிராகன் படம் இருந்தால் அது சீன பட்டாசு என கணித்து சோதனை நடத்துகின்றனர்.
பட்டாசுகளை பிரித்தோ அல்லது வெடித்து பார்த்தோ பிடிக்க முடியாமல் தனிப்படையினர் திணறி வருகின்றனர். இதுகுறித்து தனிப்படையை சேர்ந்த சிலர் கூறுகையில், "இறுதி நாட்களில் இதை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாட்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உள்ளோம்" என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications