4 மாதங்களாக ஸ்கெட்ச் போட்டு திமுக நிர்வாகி வெட்டிக் கொலை.. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை தீவிரம்!
செங்கல்பட்டு: தாம்பரம் அருகே திமுக நிர்வாகியை நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை செய்த கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலையாளிகளை பிடிக்க 2 உதவி ஆணையர்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை தாம்பரத்தை அடுத்த வண்டலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆராவமுதன். இவர் திமுக காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்தார். காட்டாங்குளத்தூர் ஒன்றிய துணை சேர்மனாகவும் இருந்தார். அதற்கு முன்னதாக வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவராகவும் ஆராவமுதன் பொறுப்பு வகித்துள்ளார்.

இன்று முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வண்டலூர் மேம்பாலம் அருகில் படப்பை செல்லும் பிரதான சாலையில் கட்டப்பட்டிருந்த புதிய பேருந்து நிறுத்தத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கும் ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக தனது காரில் நேற்று இரவு வந்துள்ளார். அப்போது அதிவேகமாக வந்த காரில் இருந்து இறங்கிய அடையாளம் தெரியாத நபர்கள் ஆராவமுதன் வந்த காரின் மீது நாட்டு வெடி குண்டை வீசி தாக்கினர்.
இதனால் அதிர்ச்சியடைந்து, அங்கிருந்து தப்பிக்க முயன்ற ஆராவமுதனை, அடையாளம் தெரியாத கும்பல் சுற்றி வளைத்து அவர்கள் கொண்டு வந்திருந்த பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்து கை துண்டான நிலையில் சாலையில் ரத்த வெள்ளத்தில் ஆராவமுதன் சாய்ந்தார். பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு ஆட்டோ மூலம் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மண்ணிவாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை மேற்கொண்டனர். உயிரிழந்த திமுக பிரமுகர் ஆராவமுதனின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பெருமளவில் குரோம்பேட்டை மருத்துவமனையில் குவிந்ததால் பதட்டமான சூழல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து குரோம்பேட்டை பல்லாவரம் தாம்பரம் காவல் நிலையங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், கொலை செய்யப்பட்ட இடம் மற்றும் குரோம்பேட்டை மருத்துவமனை ஆகிய இடங்களையும் பார்வையிட்டு விசாரணையை மேற்கொண்டனர். அமல்ராஜ் உத்தரவின் பேரில் நான்கு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.
ஆளுங்கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 4 மாதங்களாக திட்டம் தீட்டி ஆராவமுதனை கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காட்டாங்கொளத்தூரில் திமுக நிர்வாகியை வெட்டிக் கொலை செய்த கும்பலை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கொலையாளிகளை பிடிக்க 2 உதவி ஆணையர்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் கொலையாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். மேலும், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications